Close
ஜூன் 11, 2025 1:11 மணி

நாமக்கல் மாவட்டத்தில் 7 இடங்களில் புதிய நூலக கட்டிடங்கள்: வீடியோ கான்பரன்சில் முதல்வர் திறப்பு..!

நாமக்கல் மாநகராட்சிக்கு உட்பட்ட, முதலைப்பட்டியில் தமிழக முதல்வரால், வீடியோ கான்பரன்சிங் மூலம் திறந்து வைக்கப்பட்ட லைப்ரரி கட்டிடத்தில், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மதிவேந்தன் குத்துவிளக்கேற்றி வைத்தார். அருகில் கலெக்டர் உமா, எம்.பி., மாதேஸ்வரன், எம்எல்ஏ ராமலிங்கம் ஆகியோர்.

நாமக்கல்:

நாமக்கல் மாவட்டத்தில் 7 இடங்களில் ரூ. 1.54 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள, லைப்ரரி கட்டிடங்களை முதல்வர் ஸ்டாலின் வீடியோ கான்பரன்சிங் மூலம் திறந்து வைத்தார்.

சிறப்பு நிதி உதவி திட்டத்தின் கீழ், நாமக்கல் மாகநராட்சிக்கு உட்பட்ட முதலைப்பட்டி, எலச்சிபாளையம் ஒன்றியம் 85 கவுண்டம்பாளையம் பஞ்சாயத்து, திம்மராவுத்தம்பட்டி, எருமப்பட்டி ஒன்றியம், ரெட்டிபட்டி பஞ்சாயத்து, மல்லசமுத்திரம் ஒன்றியம் ராமாபுரம் பஞ்சாயத்து, நாமகிரிப்பேட்டை ஒன்றியம் பெருமகவுண்டம்பாளையம் பஞ்சாயத்து, செல்லியாயிபாளையம், புதுச்சத்திரம் ஒன்றியம் நவனி பள்ளிப்பட்டி பஞ்சாயத்து ஆகிய, 7 இடங்களில், தலா ரூ. 22 லட்சம் வீதம், ரூ. 1.54 கோடி மதிப்பில், லைப்ரரி கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளது. இந்த கட்டிடங்களை சென்னையில் இருந்து, வீடியோ கான்பரன்சிங் மூலம் முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.

அதைத் தொடர்ந்து, நாமக்கல் மாநகராட்சி முதலைப்பட்டியில், முதல்வரால் திறந்து வைக்கப்பட்ட நூலக கட்டிடத்தை, வாசிப்பாளர்கள் பயன்பாட்டிற்கு வழங்கும் நிகழ்ச்சி கலெக்டர் உமா தலைமையில் நடைபெற்றது. எம்.பி., மாதேஸ்வரன், எம்.எல்.ஏ., ராமலிங்கம், மேயர் கலாநிதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழக ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மதிவேந்தன் பங்கேற்று, நூலகத்தை வாசிப்பாளர்கள் பயன்பாட்டிற்கு வழங்கி பார்வையிட்டார்.

மேலும், நாமக்கல் மாவட்டத்தில், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில், அவர்களின் நேரத்தை முறையாக பயன்படுத்தும் வகையில், நாமக்கல் மாவட்ட மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரி, ராசிபுரம் தலைமை அரசு ஆஸ்பத்திரி ஆகிய இடங்களில், நூலகங்கள் திறந்து வைக்கப்பட்டுள்ளது என அவர் கூறினார்.

தொடர்ந்து, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ், நாமக்கல் மாவட்டத்தில், மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுக்கும் பணிகளை மேற்கொள்ள, சமுதாய வழி நடத்துனர்கள், சமுதாய மறுவாழ்வு பணியாளர்கள் என, பல்வேறு நிலையில் நகர்ப்புறம் மற்றும் கிராமப்புறங்களை சேர்ந்த, 19 வட்டாரங்களில், 190 பேர் பணியமர்த்தப்படவுள்ளனர். அதன் அடிப்படையில், 10 பேருக்கு, அமைச்சர் மதிவேந்தன் பணி நியமன உத்தரவுகளை வழங்கினார்.

நாமக்கல் மாநகராட்சி துணை மேயர் பூபதி, கமிஷனர் சிவகுமார், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அருளரசு, சப் கலெக்டர் பிரபாகரன், மாவட்ட நூலக அலுவலர் தேன்மொழி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top