நாமக்கல்:
நெல்லை – கத்ரா எக்ஸ்பிரஸ் ரயில் நாமக்கல் வழியாக இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய இணை அமைச்சர் முருகன் தெரிவித்தார்.
மத்திய தகவல், ஒலிபரப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள் துறை இணை அமைச்சர் முருகன், பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக நாமக்கல் வந்தார். அப்போது அவர் நாமக்கல் ரயில் நிலையத்திற்கு வருகை தந்தார். ரயில் நிலையத்தில் ரூ. 20 கோடி மதிப்பீட்டில் அம்ருத் பாரத் திட்டத்தின்கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் சீரமைப்பு பணிகளை ரயில்வே துறை அலுவலர்களுடன் இணைந்து அமைச்சர் முருகன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அம்ருத் பாரத் திட்டத்தின்கீழ், நாமக்கல் ரயில் நிலையத்தில் முகப்பு சீரமைப்பு, 2, 4 சக்கர வாகனங்கள் பார்க்கிங் இடம், லிஃப்ட், நடை மேம்பாலம், நவீன பயணிகள் ஓய்வு அறை, நவீன கழிப்பறை, ரயில்வே பாதுகாப்பு படை அறை, பொருட்கள் வைப்பறை விருந்தினர் அறை உள்ளிட்ட பல்வேறு கட்டுமான பணிகள் நடைபெறுகிறது.
அம்ருத் பாரத் திட்டத்தின் கீழ் ரூ. 14.50 கோடி மதிப்பீட்டில் ரயில் நிலைய மேம்பாட்டு பணிகள் மற்றும் ரூ. 5.50 கோடி மதிப்பீட்டில் கூட்ஷெட் விரிவாக்க பணிகள் என மொத்தம் ரூ. 20 கோடி மதிப்பில் நடைபெற்று வருகின்றன. அந்த பணிகளை அமைச்சர் முருகன் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது நாமக்கல் மாவட்ட ரயில் உபயோகிப்பாளர்களின் கோரிக்கையை ஏற்று, ஈரோடு வழியாக டில்லி செல்வதற்கு பல்வேறு ரயில்கள் உள்ளதால், வாரம் ஒரு முறை திருநெல்வேலியில் இருந்து இயக்கப்படும் நெல்லை – கத்ரா எக்ஸ்பிரஸ் ரயிலை, நாமக்கல் வழியாக இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.
மேலும், நாமக்கல் ரயில் நிலையத்தில் சரக்கு லாரிகள் நிறுத்துமிடம், சரக்கு அறைகள் மேம்பாடு ஆகிய பணிகள் குறித்து, ரயில்வே துறை அலுவலர்களிடம் கேட்டறிந்து, அப்பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தினார். அம்ருத் பாரத் திட்டத்தின் கீழ் நாமக்கல் ரயில் நிலையம் பொதுப்பொலிவோடு திகழும் என்றும், ரயில் உபயோகிப்பாளர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்றும் அமைச்சர் முருகன் தெரிவித்தார்.
இந்த ஆய்வின்போது, நாமக்கல் கிழக்கு மாவட்ட பாஜ தலைவர் சரவணன், சேலம் ரயில்வே கோட்ட துணை மேலாளர் சிவலிங்கம், முதுநிலை திட்ட மேலாளர் கங்காராஜு உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.