நாமக்கல்:
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 15 ஊராட்சி ஒன்றியங்களில், தலா 12 வீதம், மொத்தம் 180 கால்நடை சிறப்பு முகாம்கள் நடத்தப்படும் என கலெக்டர் தெரிவித்தார்.
நாமக்கல் ஊராட்சி ஒன்றியம், வேட்டாம்பாடி கிராமத்தில், கால்நடை பராமரிப்புத்துறையின் சார்பில் சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. கலெக்டர் உமா தலைமை வகித்து முகாமை துவக்கி வைத்தார். சிறந்த முறையில் கால்நடை வளர்ப்போருக்கு அவர் பரிசுகளை வழங்கினார்.
பின்னர் கலெக்டர் உமா கூறியதாவது:
கால்நடைகளுக்கு மருத்துவ வசதி கிடைக்கப்பெறாத கிராமங்களில், கால்நடைகளின் நலம் பாதுகாக்கும் வகையில் சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் நடத்திட தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார். அதனப்படையில், 2025-26 ஆம் ஆண்டில் நாமக்கல் மாவட்டத்தில் ஒரு ஒன்றியத்திற்கு தலா 12 முகாம்கள் வீதம் 15 ஒன்றியங்களில் 180 முகாம்கள் நடத்திட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
வரும் செப்டம்பர் 2025 வரை ஒரு ஊராட்சி ஒன்றியத்திற்கு 6 முகாம் வீதம் 15 ஒன்றியங்களுக்கு 90 முகாம்களும், அக்டோபர் 2025 முதல் மார்ச் 2026 முடிய ஒரு ஊராட்சி ஒன்றியத்திற்கு 6 முகாம்கள் வீதம் 15 ஒன்றியங்களுக்கு 90 முகாம்களும் என மொத்தம் 180 முகாம்கள் நடைபெற உள்ளது.
இம்முகாம்களில் நோய் வாய்ப்பட்ட கால்நடைகளுக்கு சிகிச்சையளித்தல், நோய்களுக்கு எதிரான தடுப்பூசிகள், குடற்புழு நீக்கம், மலடு நீக்கம், ஆண்மை நீக்கம், செயற்கைமுறை கருவூட்டல், சுண்டுவாத அறுவை சிகிச்சை, சினை பரிசோதனை செய்தல், தாது உப்பு கலவை வழங்குதல், வெறிநாய் தடுப்பூசி போன்ற சிகிச்சைகள் மற்றும் நோய் தீர்க்கும் பல்வேறு சுகாதார நடவடிக்கைகள், கால்நடைகள் மற்றும் கோழிகளுக்கு இலவசமாக மேற்கொள்ளப்படும் என அவர் கூறினார். முகாமில் மண்டல இணை இயக்குர் பழனிவேல், உதவி இயக்குநர் விஜயகுமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்