காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட திருக்காலிமேடு பகுதியில் அமைந்துள்ளது அல்லாபாத் ஏரி. இந்த ஏரி நீண்ட பரப்பளவில் அமைந்திருந்தாலும் அதை சரியான முறையில் பராமரிக்காத நிலையில் அங்கு மான் போன்ற வனவிலங்குகள் அதிக அளவில் உலாவி வந்தது.
இந்த நிலையில் குடியிருப்புகள் நாளுக்கு நாள் பெருக காஞ்சிபுரத்திற்கு மிகப்பெரிய நீராதாரம் தேவைப்படும் கருத்தில் கொண்டு காஞ்சிபுரம் மாநகராட்சி இந்த அல்லாபாத் ஏரியை புனரமைக்க முடிவு செய்தது.
இதற்கு சென்னை எக்சோரா அமைப்பு மற்றும் கோமோட்சோ அமைப்பு அதற்கான இயந்திர உதவியை அளித்து சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
இன்று இதனை காஞ்சிபுரம் எம்எல்ஏ எழிலரசன் மேயர் மகாலட்சுமி யுவராஜ் மற்றும் மாநகராட்சி பொறியாளர்களுடன் இணைந்து ஆய்வு மேற்கொண்டார்.
தூர்வாரப்பட்ட பகுதி மற்றும் சுத்தம் செய்யப்படும் பகுதிகள் மற்றும் கரை அமைக்கும் இடங்கள் உள்ளிட்டவைகளை பார்வையிட்டு பணிகள் குறித்து மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளிடம் பேசிய எம்எல்ஏ எழிலரசன் , பல ஆண்டுகளாக தூர்வாரப்படாமல் இருந்த இந்த ஏரி தற்போது சீரமைக்கப்பட்டு வருகிறது மகிழ்ச்சி அளிக்கிறது. காஞ்சிபுரத்தில் பெரிய நீர் ஆதாரமாக இந்த ஏரி அமையும் எனவும் , பேரிடர் மழைக்காலங்களில் நகரில் உள்ள நீர் முழுவதும் இந்த இடத்திற்கு வரும் வகையில் இது வடிகாலாக அமையும் எனவும் தெரிவித்தார்.
மேலும் இதனை ஒட்டிய கரைப்பகுதிகள் அனைத்தும் மிகுந்த கவனத்துடன் அமைக்கப்பட்டு அதன் அருகிலேயே செல்லும் மஞ்சள் நீர் கால்வாய் நீரும் சேராத வகையில் அமைக்க உள்ளது.
பொதுமக்களும் இது போன்ற நீர் நிலைகளை வருங்கால கருத்தில் கொண்டு மாசு படுத்தாமல் பராமரிக்க வேண்டும் எனவும் கழிவுநீர்களை இதில் விடுவது கொட்டுவது என எதையும் மேற்கொள்ள வேண்டாம் எனவும் கேட்டுக் கொண்டார்.