நாமக்கல்:
நாமக்கல் அருகே, பொட்டணம் கிராமத்தில் உழவர் சந்தை சார்பில், விவசாயிகளுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
நாமக்கல் வேளாண் வணிகத்துறை துணை இயக்குனர் நாசர் ஆலோசனையின்படி, நாமக்கல் உழவர் சங்தையின் சார்பில், சேந்தமங்கலம் வட்டாரம், பொட்டணம் கிராமத்தில், உழவர் சந்தை குறித்து, விவசாயிகளுக்கான விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. உழவர்சந்தை நிர்வாக அலுவலர் சேகர் தலைமை வகித்தார். கூட்டத்தில் உழவர் சந்தை நிர்வாகம், அரசின் புதிய வழிகாட்டு நெறிமுறைகள், புதிய அடையாள அட்டைகள் பெற தேவையான ஆவணங்கள், இலவச பஸ் வசதி உள்ளிட்டவை குறித்து விவசாயிகளுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.
உழவர் சந்தையில், அதிகாலையில் குலுக்கல் முறையில் கடைகள் ஒதுக்கீடு செய்தல், விவசாயிகள் கொண்டு வந்த விளைபொருட்களை பதிவு செய்தல், விலை நிர்ணயம், விலைப் பட்டியல் எழுதுதல் குறித்து, உதவி வேளாண்மை அலுவலர் கோகுல் விளக்கி கூறினார். மாலைநேர உழவர் சந்தை செயல்பாடு, மகளிர் சுய உதவி குழுக்கள் மூலம் செயல்படும் ஆங்கில காய்கறி கடைகள் குறித்து உதவி வேளாண்மை அலுவலர் ஸ்ரீதர் பேசினார். 29 விவசாயிகள் முகாமில் கலந்துகொண்டு பயனடைந்தனர்.