நாமக்கல்:
நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஆபீசில், அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. கலெக்டர் உமா தலைமை வகித்தார். ராஜ்யசபா எம்.பி., ராஜேஷ்குமார், எம்எல்ஏ ராமலிங்கம், கலாநிதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மதிவேந்தன் விழாவில் கலந்துகொண்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிப் பேசியதாவது:
தமிழக முதல்வர் ஸ்டாலின் ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு அனைத்து மக்களும் பயன்பெறும் வகையில் பல்வேறு சிறப்பான திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. குறிப்பாக மாற்றுத்திறனாளிகள் மீது தனி கவனம் செலுத்தப்பட்டு, பல்வேறு உதவி உபகரணங்கள் உள்பட அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது. மாற்றுத்திறனாளிகளுக்கான உரிமைகள் திட்டத்திற்கு ரூ.1,700 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நகர்ப்புற மற்றும் ஊரக உள்ளாட்சிகளில் மாற்றுத்திறனாளிகள் நேரடியாக தேர்தலில் போட்டியிடாமல் நியமன உறுப்பினர்களாக நியமிப்பதற்கான சட்டத்திருத்தம் வழங்கப்பட்டுள்ளது.
கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வீட்டிற்கு தலா ரூ.3.50 லட்சம், தொழிலாளர் நலத்துறை வாரியம் சார்பாக தனிநபர் வீட்டிற்கு ரூ.4 லட்சம் வரை வழங்கப்பட்டு வருகிறது. மேலும், அடுக்குமாடி குடியிருப்பில் வீடு வாங்கி கொள்வதற்கு தலா ரூ.1.50 லட்சம் வரை வாரியம் மூலம் வழங்கப்படுகிறது என்றார். தொடர்ந்து நாமக்கல் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் 128 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.30 லட்சத்து 91 ஆயிரத்து 862 மதிப்பில் நலத்திட்ட உதவிகள் என மொத்தம் 350 பயனாளிகளுக்கு ரூ.4.34 கோடி மதிப்பில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
துணை மேயர் பூபதி, கால்நடை பராமரிப்புத் துறை மண்டல இணை இயக்குர் பழனிவேல், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் அலுவலர் கலைச்செல்வி உள்பட பலர் கலந்து கொண்டனர்.