நாமக்கல்:
கூடுதல் கமிஷன் வசூலிக்கும் ஸ்விக்கி, ஜொமாட்டோ உள்ளிட்ட ஆன்லைன் கம்பெனிகளுக்கு ஜூலை 1ம் தேதி முதல் உணவு வகைகள் சப்ளை நிறுத்தப்படும் என ஹோட்டல் உரிமையாளர்கள் சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
நாமக்கல் நகரம் மற்றும் தாலுகா ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கக் கூட்டம் அதன் தலைவர் ராம்குமார் தலைமையில் நடைபெற்றது. செயலாளர் அருள்குமரன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில், ஸ்விக்கி, ஜொமாட்டோ உள்ளிட்ட ஆன்லைன் உணவு டெலிவரி செய்யும் நிறுவனங்கள் ஓட்டல் உரிமையாளர்களிடம் ஒப்பந்தம் செய்யும்போது குறைந்த அளவு தொகை கமிஷன் கொடுத்தால் போதும் என்று கூறினார்கள்.
ஆனால் தற்போது விளம்பர செலவு, டெலிவரி செலவு, ஜிஎஸ்டி வரி என பல்வேறு கட்டணஙகளை பிடித்தம் செய்துகொண்டு ஓட்டல் உரிமையாளர்களுக்கு உணவுக்கான தொகையை வழங்குகின்றனர். மேலும், ஒவ்வொரு கடைக்கும் வெவ்வேறு விதமான கமிஷன் வழங்குகின்றனர். ரூ. 10 ஆயிரம் மதிப்புள்ள உணவு வியாபாரத்தில் கமிஷனாக ரூ. 4 ஆயிரம் வரை பிடித்தம் செய்கின்றனர். இதனால் ஓட்டல் உரிமையாளர்களுக்கு பெரும் இழப்பு ஏற்படுகிறது.
வருகிற 30ம் தேதிக்குள் ஆன்லைன் உணவு நிறுவனங்கள், ஓட்டல் உரிமையாளர்கள் சங்கத்தினரை சந்தித்து பேச்சவார்த்தை நடத்தி, கமிஷன் பிரச்சினைக்கு தீர்வுகாண வேண்டும்.
இல்லாவிட்டால் ஜூலை 1ம் தேதி அனைத்து ஆன்லைன் உணவு நிறுவனங்களுக்கும், உணவு வகைகள் சப்ளை செய்வதை முழுமையாக நிறுத்துவதென்று கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ஓட்டல் உரிமையாளர்கள் சங்க துணைத்தலைவர் பாலசங்கர், பொருளாளர் விக்னேஷ், இணை செயலாளர் புஷ்பராஜ், பொருளாளர் விக்னேஷ் உள்ளிட்டோர் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.




