நாமக்கல்:
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 போட்டித்தேர்வுக்கு மாநில அளவிலான இலவச மாதிரி தேர்வு, நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் நடந்தது. 210 தேர்வர்கள் பங்கேற்றனர்.
நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் இயங்கிவரும் தன்னார்வ பயிலும் வட்டம் மூலம், டி.என்.பி.எஸ்.சி., மற்றும் டி.என்.யு.எஸ்.ஆர்.பி., போன்ற போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகிறது. இம்மாவட்டத்தில், போட்டித்தேர்வுகளுக்கு தயாராகும் மாணவ, மாணவியர், அதிக அளவில் பங்கு பெற்று பயனடைந்து வருகின்றனர்.
தற்போது, டி.என்.பி.எஸ்.சி. குரூப் 4, டி.என்.யு.எஸ்.ஆர்.பி., எஸ்.ஐ., ஆகிய தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டு வருகிறது. வரும், ஜூலை, 12ல் டி.என்.பி.எஸ்.சி. குரூப் 4 தேர்வு நடக்க உள்ளது. அதையடுத்து, குரூப், 4 தேர்விற்கான மாநில அளவிலான இலவச மாதிரி தேர்வு, தமிழகம் முழுவதும், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டு மையத்தில் நடைபெற்றது.
நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில், இரண்டு கட்டமாக எழுத்து தேர்வு நடந்தது. காலையில் நடந்த முதல்கட்ட தேர்வில் 130 பேர், மாலையில் நடந்த இரண்டாம் கட்ட தேர்வில் 80 பேர் என, மொத்தம், 210 தேர்வர்கள் பங்கேற்று தேர்வு எழுதினார்கள். நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய தன்னார்வ பயிலும் வட்டத்தின் மூலம், 2024-25ல் நடந்த, டி.என்.பி.எஸ்.சி., குரூப் 2, 2ஏ தேர்வில், 2 பேர், குரூப் 4 தேர்வில் 10 பேர், டி.என்.யு.எஸ்.ஆர்.பி., பி.சி., தேர்வில் 13 பேர் என, மொத்தம், 25 பேர் வெற்றி பெற்று அரசு பணியில் சேர்ந்துள்ளனர்.




