Close
மார்ச் 7, 2026 4:36 மணி

சேலத்தில் இருந்து ஈரோடு வழியாக செல்லும் 7 ரயில்களை நாமக்கல் வழியாக இயக்க கோரிக்கை..!

மத்திய இணை அமைச்சர் முருகனிடம், நாமக்கல் கிழக்கு மாவட்ட பாஜ தலைவர் சரவணன் கோரிக்கை மனு அளித்தார்.

நாமக்கல்:

சேலத்தில் இருந்து ஈரோடு வழியாக செல்லும் 7 ரயில்களை நாமக்கல் வழியாக இயக்க வேண்டும் என, மத்திய இணை அமைச்சரிடம் நாமக்கல் கிழக்கு மாவட்ட பாஜ தலைவர் நேரில் வேண்டுகோள் விடுத்தார்.

மத்திய தகவல் தொடர்பு மற்றும் பார்லி. விவகாரத்துறை இணை அமைச்சர் முருகனை, நாமக்கல் கிழக்கு மாவட்ட பாஜ தலைவர் சரவணன் நேரில் சந்தித்து மனு ஒன்றை அளித்தார்.

அதில் கூறியுள்ளதாவது:-

சேலத்தில் இருந்து ஈரோடு – கரூர் வழியாக செல்லும் வண்டி எண். 16788 கட்ரா – திருநெல்வேலி வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில், கோவா வாஸ்கோடகமாவில் இருந்து வேளாங்கண்ணி வரை செல்லும் வண்டி எண். 17315 வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில், கச்சேகுடாவில் இருந்து மைசூர் செல்லும் வண்டி எண். 22715 வாராந்திர சூப்பர் ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில், ஓகாவில் இருந்து தூத்துக்குடிவரை செல்லும் வண்டி எண். 19568 வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில், சண்டிகாரில் இருந்து மதுரை செல்லும் வண்டி எண். 20494 சூப்பர் ஃபாஸ்ட் வாரம் இருமுறை செல்லும் ரயில், தினசரி மைசூரில் இருந்து கூடலூர் வரை செல்லும் எண்டி எண். 16232 எக்ஸ்பிரஸ் ரயில், மைசூரில் இருந்து தூத்துக்குடி வரை செல்லும் வண்டி எண். 16236 தினசரி எக்ஸ்பிரஸ் ரயில் ஆகிய 7 ரயில் வண்டிகளை சேலத்தில் இருந்து நாமக்கல்லில் வழியாக கரூர் செல்லும் வகையில் மாற்றியமைக்க வேண்டும்.

இதன் மூலம் இந்த ரயில்களின் பயணதூரம் 40 கி.மீ. குறையும். சுமார் 1 மணி நேரத்திற்கு மேல் பயண நேரம் மிச்சமாகும். மேலும் இந்த 7 ரயில்களும், நாமக்கல் ரயில் நிலையத்தில் நின்று செல்லும் வகையில் இயக்க வேண்டும் என அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top