நாமக்கல் :
நாமக்கல் தெற்கு அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில், நாமக்கல் மாவட்ட உடற்கல்வித்துறை ஆசிரியர்கள் சங்க பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. சிஇஓ மகேஸ்வரி தலைமை வகித்தார். டிஇஓக்கள் விஜயன், ஜோதி, பச்சமுத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர். திருச்செங்கோடு அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி உடற்கல்வி இயக்குனர் சுதந்திரா வரவேற்றார்.

நாமக்கல் மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் .காந்திமதி பங்கேற்று, பள்ளிகளில் எந்தெந்த காலகட்டங்களில் விளையாட்டுப் போட்டிகளை நடத்துவது, பள்ளிகளுக்கிடையேயான விளையாட்டுப் போட்டி மற்றும் மாவட்ட, மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகளை நடத்துவது குறித்து விளக்கிப் பேசினார்.
மேலும், மாணவர்களை மாவட்ட, மாநில மற்றும் தேசிய அளவிலான போட்டிகளுக்கு தயார் செய்வது குறித்தும், உடற்கல்வி ஆசிரியர்களின் சந்தேகங்களுக்கும் விளக்கம் அளிக்கப்பட்டது. விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு அரசு அளிக்கும் முன்னுரிமைகள் குறித்தும் ஆசிரியர்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.
நாமக்கல் மாவட்டம் முழுவதும் இருந்து 200க்கும் மேற்பட்ட அரசு, அரசு உதவி பெறும் பள்ளி உடற்கல்வி இயக்குனர்கள், ஆசிரியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.




