நாமக்கல்:
நாட்டில் விலைவாசி உயர்வுக்கும், வரிகள் உயர்வுக்கும் ஊழலோ முக்கிய காரணம் என லோக் ஆயுக்தா உறுப்பினர் ராமராஜ் தெரிவித்தார்.
தமிழ்நாடு லோக் ஆயுக்தா உறுப்பினர் ராமராஜ், நாமக்கல்லில் நடைபெற்ற ரோட்டரி சங்க விழாவில் கலந்துகொண்டு பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:
ஒவ்வொரு நாட்டிலும் அரசாங்கத்தை நடத்துவதற்காக, கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள பொருட்களையும் சேவைகளையும் வாங்க மக்கள் வரிப்பணம் செலவு செய்யப்படுகிறது. ரோடுகள் அமைத்தல், பாலங்கள் கட்டுதல், வீட்டு வசதிகளை உருவாக்குதல், குடிநீர் தேவைகளை பூர்த்தி செய்தல் போன்ற அடிப்படையான மக்கள் நல்வாழ்வு திட்டங்களுக்கு அரசு ஒவ்வொரு ஆண்டும் பல கோடிக்கணக்கான ரூபாயை செலவழிக்கிறது. இந்தத் திட்டங்களை செயல்படுத்துவதில் ஊழல் நடைபெறும் போது ஏற்படும் கூடுதல் செலவானது மக்களின் தலையில் ஏற்றப்படுகிறது.
ஏழை மக்களுக்காக செயல்படுத்தப்படும் பொது விநியோகத் திட்டம், மாணவ மாணவிகளுக்காக செலவிடப்படும் கல்வி வளர்ச்சிக்கான நிதி, குழந்தைகள் மற்றும் பெண்களுக்காக வழங்கப்படும் உதவிகள், கட்டணமில்லா மருத்துவ வசதி போன்ற பல்வேறு மக்கள் நல திட்டங்களை ஒவ்வொரு நாடும் செயல்படுத்துகிறது. இத்தகைய திட்டங்களில் ஊழல் ஏற்படும் போது, மக்கள் நலத் திட்டங்கள் சரியான பயனாளிகளுக்கு செல்லாமல் மக்கள் பாதிக்கப்படுகிறார்கள்.
அரசின் பல்வேறு துறைகளிலும் அரசால் நடத்தப்படும் பல்வேறு அமைப்புகளிலும் அரசு உதவி பெறும் அமைப்புகளிலும் ஒவ்வொரு ஆண்டும் பலர் ஓய்வு பெறுகிறார்கள். இந்த காலி பணியிடங்களை நிரப்ப பணியாளர் தேர்வு நேர்மையாக நடைபெறாமல், லஞ்சம் பெற்றுக் கொண்டு பணியாளர்களின் நியமித்தால் திறமையான நபர்களுக்கு வாய்ப்பு பறிபோகிறது. மேலும், லஞ்சம் கொடுத்து வேலைக்கு வரும் அரசு பணியாளர்களும், கொடுத்த லஞ்சத்தை மீட்டெடுக்கும் எண்ணத்தில் நேர்மையற்றவர்களாக செயல்படக்கூடிய நிலைமை ஏற்படுகிறது.
ஒரு பணியை செய்வதற்கு லஞ்சம் வாங்குதல் அல்லது சட்டப்படி செய்ய வேண்டிய கடமையை செய்யாமல் இருப்பதற்கு லஞ்சம் வாங்குதல் ஆகியவை காரணமாக நேர்மையற்ற நிர்வாகம் ஏற்படுகிறது. நாம் ஒவ்வொருவரும் நேரடியாக பல வரிகளை செலுத்துகிறோம் வாங்கும் ஒவ்வொரு பொருளின் மூலமாகவும் மறைமுக வரிகளை செலுத்துகிறோம். ஊழல் அதிகரிக்கும் போது வரி உயர்வும் விலைவாசி உயர்வும் ஏற்படுகிறது. இது ஏழை மற்றும் நடுத்தர மக்களிடையே அமைதியற்ற சூழலை உருவாக்குகிறது.
மக்களின் அமைதியான வாழ்க்கைக்கு ஊழல் மிகப்பெரிய எதிரியாகும். சமூக அமைதியை நிலைநாட்ட லஞ்சம் மற்றும் ஊழலுக்கு எதிரான பிரச்சாரத்தையும் செயல்பாடுகளையும் தன்னார்வ அமைப்புகள் மேற்கொள்ள வேண்டும். எந்த ஒரு சட்டம் இயற்றப்பட்டாலும் எந்த ஒரு அமைப்பு ஏற்படுத்தப்பட்டாலும் அவை குறித்த விழிப்புணர்வு மக்களிடையே இல்லாவிட்டால் அந்தச் சட்டத்தாலும் அந்த அமைப்பாலும் எந்த பயன்களையும் உருவாக்க முடியாது.
ஊழலை ஒழிக்கும் உயர்நிலை அமைப்பான தமிழ்நாடு லோக் ஆயுக்தா பற்றி தமிழக மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவது தன்னார்வ அமைப்புகள், கல்வி நிறுவனங்கள், சமூக செயல்பாட்டாளர்களின் கடமையாகும் என கூறினார்.




