இந்தியாவில் உள்ள முக்தி தரும் நகரங்கள் 7 ஆகும். அவற்றுள் தென்னகத்தில் அமைந்துள்ளது காஞ்சிபுரம் நகரமாகும். இந்நகரம் முற்காலத்தில் பல்லவர்களின் தலைநகரமாகவும் ஆட்சிக்குட்பட்ட சிறந்த நகரங்களில் ஒன்றாகவும் திகழ்ந்தது.

இங்கு ஆழ்வார்களாலும், நாயன்மார்களாலும் பாடல்பெற்ற தலங்கள் பல உள்ளன. அவற்றுள் நகரின் முக்கிய பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு பச்சைவண்ணர் மற்றும் பவளவண்ணர் திருக்கோயிலும் ஒன்றாகும். இத்திருக்கோயில் 108 திவ்ய தேசங்களுள் 55 வது திவ்யதேசமாகவும், திருமங்கையாழ்வாரால் மங்களாசாசனம் தலமாகவும் சுமார் 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த தலமாகவும் உள்ளது.
புராண காலத்தில் பிரம்மன் சரஸ்வதி தேவியை அழைக்காமல் தனியே யாகம் ஒன்றைச் செய்தார். அந்த யாகத்தை தடுத்து நிறுத்திட சரஸ்வதி தேவி பல வழிகளில் முயற்சித்தார்.

யாகத்தை அழித்திட அசுரர்களை தோற்றுவித்து ஏவினார். பிரம்மன் திருமாலை வேண்டினார். அவரது வேண்டுதலுக்கு செவிசாய்த்து திருமால் அசுரர்களை அழித்து அவர்களது உதிரத்தை தனது உடலில் ஏற்று பவள வண்ண நிறத்தினராய் காட்சி அருளினார். அதனால் இத்தலத்தில் காட்சி அருளும் இறைவனுக்கு பவள வண்ண பெருமாள் என்று திருப்பெயர் வழங்கப்படுகின்றது.
அதே போன்று ஆழ்வார்களும் ஆச்சாரிய பெருமக்களுக்கும் திருமாலை “பச்சைமா மலைபோல் திருமேனி” என்று பாடியுள்ளனர். அவர்கள் பாடியருளியபடி இத்தலத்திற்கு சற்று அருகாமையில் உள்ள திருக்கோயிலில் காட்சியருளும் இறைவன் பச்சைவண்ணர் என்ற திருப்பெயரால் அழைக்கப்படுகிறார்.
இது போன்ற பல்வேறு புகழ்பெற்ற கோயில்களை தொன்மை மாறாமல் புனரமைக்க தமிழக முதல்வர் உத்தரவிட்டதன் பேரில் இன்று நடைபெற்ற விழாவில் தமிழக முதல்வர் 63 திருக்கோயில்களை ரூபாய் 100 கோடியின் மதிப்பீட்டில் புணரமைத்திடும் பணியினை துவங்கி வைத்தார்.
அவ்வகையில் ஸ்ரீ பச்சைவண்ணர் மற்றும் பவள வண்ணர் திருக்கோயில் புதுப்பிக்கும் பணிக்கு ரூபாய் 2.5 கோடியும், அழகிய சிங்கப்பெருமாள் திருக்கோயிலுக்கு ரூபாய் 1.18 கோடி மதிப்பீட்டிலும் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.
காஞ்சிபுரம் பவளவண்ணர் திருக்கோயில் வளாகத்தில் நடைபெற்ற விழாவில் தமிழக கைத்தறித்துறை அமைச்சர் காந்தி மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி, எம்பி செல்வம் சட்டமன்ற உறுப்பினர்கள் சுந்தர் எழிலரசன் மற்றும் உள்ளாட்சிப் பிரதிநிதிகள் இந்து சமய அறநிலைத்துறை அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டனர்.
ஸ்ரீ பச்சைவண்ணர் மற்றும் பவளவண்ணர் திருக்கோயில் புணரமைப்பு பணிகள் 50 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறுவதும், அழகிய சிங்கப்பெருமாள் திருக்கோயில் 15 ஆண்டுகளுக்குப் பிறகு திருப்பணிகள் நடைபெறுவது என்பது குறிப்பிடத்தக்கது.




