நாமக்கல்:
கொண்டிசெட்டிப்பட்டி ஏரியில், நாமக்கல் மாநகராட்சி கழிவு நீர் நேரடியாக கலப்பதை தடுத்து நிறுத்த வேண்டும் என விவசாய முன்னேற்றக் கழகத்தினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இது குறித்து விவசாய முன்னேறக்கழக மாநில பொதுச்செயலாளர் பாலசுப்ரமணியம், நாமக்கல் மாநகராட்சி கமிஷனருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியுள்ளதாவது:
நாமக்கல் – மோகனூர் மெயின் ரோட்டில், மாநகராட்சிக்கு சொந்தமான கொண்டிசெட்டிபட்டி ஏரி உள்ளது. இந்த ஏரி மிகவும் புகழ்வாய்ந்த ஏரியாகும். மேலும் அப்பகுதியில் விவசாய தோட்டங்களில் உள்ள கினறுகள் மற்றும் பொதுமக்களின் வீடுகளில் உள்ள போர்வெல்களுக்கு, இந்த ஏரி தண்ணீரே நீராதாரமாக விளங்கி வருகிறது. அப்பகுதி மக்கள் தினந்தோறும் காலையிலும் மாலையிலும் அந்த ஏரி கரையில் நடைப்பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். மேலும் ஏரிக்கரையில் அரசு தொடக்கப்பள்ளியும், சிறுவர் பூங்காவுகள் அமைந்துள்ளது.
இந்த நிலையில், அந்த ஏரியில் நாமக்கல் மாநகராட்சி கழிவுகள் நேரடியாக வந்து கலக்கின்றது. இதனால் அடிக்கடி ஏரியில் மீன்கள் செத்து மிதக்கின்றன. துர்நாற்றம் வீசுகிறது. கொண்டிசெட்டிப்பட்டி ஏரியில் கழிவு நீர் கலப்பதை மாநகராட்சி உடனடியாக தடுத்து நிறுத்தாவிட்டால், சுகாதார சீர்கேடு ஏற்பட்டு பொதுமக்களுக்கு பல்வேறு நோய்கள் உருவாகும் அபாயம் உள்ளது. இன்னும் 15 நாட்களுக்குள் அந்த ஏரியில் கழிவுநீர் கலப்பதை தடுத்து நிறுத்தாவிட்டால், அந்தப் பகுதி மக்களின் ஆதரவோடு, சென்னையில் உள்ள தென்னிந்திய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்து நிவாரணம் தேடிக் கொள்ள நேரிடும் என அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.




