நாமக்கல்:
புதன்சந்தையில் தேசிய முட்டை ஒங்கிணைப்புக்குழு (என்இசிசி) வட்டார அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றது.
தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு (என்இசிசி) கோழிப்பண்ணையாளர்களுக்கு பல்வேறு சேவைகளை வழங்கி வருகிறது. குறிப்பாக, நாமக்கல் மண்டல என்இசிசி மூலம் தினசரி கோழிப்பண்ணைகளில் முட்டை கொள்முதல் விலை அறிவிக்கப்படுகிறது. இதை பண்ணையாளர்கள் கடைபிடித்து வருகின்றனர். நாமக்கல் மண்டலத்திற்கு உட்பட்ட புதன்சந்தை பகுதி பண்ணையாளர்களுக்காக, புதன்சந்தையில் வட்டார என்இசிசி அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளது.
இதன் திறப்பு விழாவிற்கு வட்டார தலைவர் பிரபு தலைமை வகித்தார். என்இசிசி மண்டல பொருளாளர் சுந்தரராஜ் முன்னிலை வகித்தார். என்இசிசி நாமக்கல் மண்டல தலைவர் பொன்னி சிங்கராஜ் விழாவில் கலந்துகொண்டு வட்டார அலுவலகத்தை திறந்து வைத்தார். திரளான என்இசிசி நிர்வாகிகள் மற்றும் கோழிப்பண்ணையாளர்கள் விழாவில் கலந்துகொண்டனர்.




