நாமக்கல்:
கிட்னி விற்பனை செய்வதாக வந்த புகாரின் பேரில், சுகாதாரப் பணிகள் இணை இயக்குனர் தலைமையிலான மருத்துவக் குழுவினர் பள்ளிபாளையத்தில் நேற்று ஆய்வு மேற்கொண்டனர்.
பள்ளிபாளையம் மற்றும் அதன் சுற்று வட்டாரத்தில் விசைத்தறிக் கூடங்கள் மற்றும் சாய ஆலைகள் நிறைந்துள்ளன. இங்கு ஏராளமான உள்ளூர் தொழிலாளர்கள் மற்றும் வெளிமாநில தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்த தொழிலாளர்கள் உள்பட வறுமையில் உள்ளவர்களை குறிவைத்து சிலர் கிட்னி விற்பனை செய்யும் புரோக்கர்களாக செயல்படுவதாக புகார் எழுந்தது.
இதையடுத்து நாமக்கல் கலெக்டர் துர்காமூர்த்தி உத்தரவின் பேரில், மாவட்ட சுகாதாரப் பணிகள் இணை இயக்குனர் ராஜ்மோகன் தலைமையிலான மருத்துவக் குழுவினர், குமாரபாளையம் தாசில்தார் சிவக்குமார் மற்றும் பள்ளிபாளையம் போலீசார் நேற்று பள்ளிபாளையம் பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர்.
இதுகுறித்து இணை இயக்குனர் ராஜ்மோகன் கூறியதாவது :-
பள்ளிபாளையம் அன்னை சத்யா நகரில் உள்ள ஆனந்தன் என்பவர் கிட்னி விற்பனை செய்யும் புரோக்கராக செயல்படுவதாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக விசாரணை மேற்கொள்ள அவரது வீட்டிற்கு சென்றபோது ஆனந்தன் வீட்டில் இல்லை. அங்குள்ளவர்களிடம் விசாரணை நடத்தியதில் அவர் திருப்பூரைச் சேர்ந்தவர் எனவும், கடந்த 6 மாதங்களாக இங்கு தங்கியிருப்பதும் தெரியவந்தது.
எனினும் ஆனந்தன் தலைமறைவானதால் அவர் மீது பள்ளிபாளையம் அரசு ஆஸ்பத்திரி மருத்துவ அலுவலர் வீரமணி மூலம் பள்ளிபாளையம் போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது. போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வருகினன்றனர். அவர் பிடிபட்டாமல் மட்டுமே அடுத்தகட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ள முடியும் என்றார்.




