நாமக்கல் :
உள்ளாட்சி அமைப்புகளுக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என உள்ளாட்சித் துறை ஊழியர் சங்க மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
நாமக்கல் மாவட்ட ஊரக வளர்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியர் சங்கத்தின், 6ஆவது மாவட்ட மாநாடு நாமக்கல்லில் நடைபெற்றது. சங்க மாவட்ட தலைவர் கண்ணன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் வேலுசாமி, பொருளாளர் சிவராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தொழிற்சங்க நிர்வாகி மலர்கொடி வரவேற்றார். மாநில பொது செயலாளர் பாலசுப்பிரமணியன் பங்கேற்றுப் பேசினார்.
மாநாட்டில் திமுக அளித்த தேர்தல் வாக்குறுதிபடி மாநகராட்சி, நகராட்சி. பேரூராட்சி, கிராம ஊராட்சிகளில் பணிபுரியும் தூய்மை பணியாளர் மற்றும் தூய்மை காவலர்கள் உள்ளிட்டடோரை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.
துப்புரவு பணியாளர், தூய்மை காவலர்களுக்கு மாதம் ரூ.12,593 ஓய்வூதியமாக வழங்க வேண்டும். மேல்நிலை குடிநீர் தொட்டி ஆபரேட்டர்களுக்கு நீதிமன்ற உத்திரவின்படி சம்பளம் ரூ. 14,593 வழங்க வேண்டும். மத்திய, மாநில அரசுகள் உள்ளாட்சி அமைப்புகளுக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்.
பணியாளர்களிடம் பிடித்தம் செய்த பிஎஃப் தொகையை தாமதம் இன்றி வங்கியில் செலுத்த வேண்டும். கொரோனா காலங்களில் பணி செய்த உள்ளாட்சித் துறை ஊழியர்களுக்கு அரசு உத்தரவின்படி, 3 மாத ஊக்கத்தொகை ரூ.15 ஆயிரம் வழங்க வேண்டும் என்பவை உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
முன்னதாக சிஐடியு மாவட்ட துணை செயலாளர் சுரேஷ் மாநாட்டை தொடங்கி வைத்தார். அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் முருகேசன் உள்ளிட்ட பலர் பேசினார்கள். மேலும், தொழிற்சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.




