Close
மார்ச் 7, 2026 4:41 மணி

தமிழக அரசின் நம்மாழ்வார் விருது பெற இயற்கை விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்..!

நாமக்கல் கலெக்டர் துர்கா மூர்த்தி

நாமக்கல்:

தமிழக அரசின் நம்மாழ்வார் விருது பெற இயற்கை மற்றும் அங்கக வேளாண்மை விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்.

இது குறித்து, நாமக்கல் கலெக்டர் துர்காமூர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:

அங்கக வேளாண்மை என்பது செயற்கை ரசாயன உரம், பூச்சிகொல்லி மருந்துகள் ஆகியவற்றை தவிர்த்து இயற்கையுடன் இணைந்து உயிரியல் சுழற்சி, இயற்கை மற்றும் அங்கக எரு பயன்படுத்தல் மூலம் பயிர் பாதுகாப்பு, மண்வளம் பாதுகாப்பு மற்றும் மக்களின் உடல் நலத்தையும் காப்பதாகும்.

வேளாண்மைத் துறையின் மூலம் 2025-26-ம் ஆண்டில் மாநில வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ், அங்கக வேளாண்மையை தானும் சிறப்பான முறையில் செய்வதோடு, அதனை பிற விவசாயிகளையும் ஊக்கப்படுத்தும் விவசாயிகளுக்கு சிறந்த அங்கக வேளாண் விவசாயிக்கான நம்மாழ்வார் விருது மாநில அளவில் 3 விவசாயிகளுக்கு வழங்கப்பட உள்ளது. மாநில தேர்வு குழுவினால் தேர்ந்தெடுக்கப்படும் மூன்று இயற்கை விவசாயிகளுக்கு தமிழ்நாடு அரசால் தலா ரூ. 2 லட்சம் ரொக்கப்பரிசு, சான்றிதழ் மற்றும் பதக்கத்துடன் சிறந்த உயிர்ம உழவருக்கான நம்மாழ்வார் விருது வழங்கப்பட உள்ளது.

நம்மாழ்வார் விருது பெற விரும்பும் விவசாயிகள் தகுதிகளாக, குறைந்தபட்சம் ஒரு ஏக்கர் பரப்பில் இயற்கை வேளாண்மையில் வேளாண் மற்றும் தோட்டக்கலை பயிர்களை சாகுபடி செய்திருக்க வேண்டும். முழுநேர இயற்கை உழவராக இருக்க வேண்டும். எந்த விதமான ரசாயன பொருட்களையும் விவசாயத்தில் பயன்படுத்தியிருக்கக் கூடாது. குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் இயற்கை வேளாண்மையில் ஈடுபட்டிருக்க வேண்டும் மற்றும் உயிர்ம வேளாண்மைக்கான சான்றிதழையும் பெற்றிருக்க வேண்டும்.

நம்மாழ்வார் விருது பெற விரும்பும் இயற்கை விவசாயிகள் அக்ரிஸ்நெட் வெப்சைட்டில் (டிஎன்அக்ரிஸ்நெட்.டிஎன்.ஜிஓவி.இன்) 15.09.2025 தேதிக்குள் ரூ. 100 பதிவுக் கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு சம்பந்தப்பட்ட வட்டார வேளாண்மை உதவி இயக்குநர்கள் அல்லது நாமக்கல், வேளாண்மை இணை இயக்குநர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top