தென்காசி மாவட்டம் கடையம் பகுதியில் அமைந்துள்ளது தோரணமலை முருகன் கோவில். இங்கு அகஸ்தியர் மற்றும் தேரையர் ஆகிய சித்தர்கள் மருத்துவ பல்கலைக்கழகம் நடத்தியதாக நம்பப்படுகிறது. இங்கு பல்வேறு திருவிழாக்கள் நடைபெறுவது வழக்கம்.
வாரம்தோறும் ஞாயிற்றுக்கிழமை சிறப்பு பூஜைகள் நடைபெறும். குழந்தைகளின் கல்வி மேம்பட பல நூற்றாண்டுகளைக் கடந்த அரச மரம், வேப்பமரம் இணைந்த இடத்தில் விருச்சக ராஜ பூஜை நடைபெற்றது.
பின்னர் தற்போது ஆடி மாதம் என்பதால் சப்த கன்னிகள் மற்றும் கன்னிமாரம்மன் கோவிலில் சுமங்கலி பூஜை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து 27 நட்சத்திரங்களுக்குரிய மரக்கன்றுகள் அமைந்துள்ள பூங்காவில் பக்தர்கள் தங்களது ராசிக்கான மரக்கன்றுகள் முன்பு நின்று பூஜை செய்தனர்.
இந்த வாரம் வனத்துறை சார்பில் நெகிழி ஒழிப்பு விழிப்புணர்வு வாரம் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக நெகிழி ஒழிப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கோவிலுக்கு வரும் பக்தர்களிடம் இருந்து நெகிழியை பெற்றுக் கொண்டு மஞ்சள் பையை வழங்கினர்.
தொடர்ந்து இனிவரும் காலங்களில் கோவிலுக்கு வரும் பக்தர்கள் நெகிழியை பயன்படுத்தாமல் துணி பையை பயன்படுத்துமாறு கேட்டுக் கொண்டனர். இந்நிகழ்வில் காண ஏற்பாட்டினை கோயில் பரம்பரை அறங்காவலர் செண்பகராமன் செய்திருந்தார்.




