நாமக்கல்:
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் மற்றும் எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு உதவிட வேண்டும் என மத்திய அமைச்சரிடம் மாதேஸ்வரன் எம்.பி., கோரிக்கை விடுத்தார்.
நாமக்கல் லோக்சபா தொகுதி கொமதேக எம்.பியும், சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் குழுவின் உறுப்பினருமான மாதேஸ்வரன், டில்லியில் மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரம் அளித்தல் துறையின் இணை அமைச்சர் ராம்தாஸ் அத்வாலேவை அவரது அலுலகத்தில் சந்தித்து பேசினார்.
அப்போது அவரிடம் கோரிக்கை மனு ஒன்றை அளித்தார். அதில் கூறியுள்ளதாவது:
அவர்களை அலுவலகத்தில் நேரில் சந்தித்து பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கலந்துரையாடினார். நாமக்கல் மாவட்டத்தில் உள்ள எஸ்.சி. எஸ்.டி. பிரிவைச் சேர்ந்த மக்கள் அதிக அளவில் வசித்து வருகின்றனர். அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மற்றும் உள் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மாவட்டத்தில் உள்ள, வயது முதிர்ந்தோர் மற்றும் உடல் ஊனமுற்றோருக்கு பயன்படும் வகையில் தேவையான இணைப்புச் சக்கரம் பொருத்திய பெட்ரோல் ஸ்கூட்டர்கள் வழங்கி உதவிட வேண்டும்.
மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இதுநாள் வரை பதிவு செய்த அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும் விரைவாக மூன்று சக்கரம் பொருத்தப்பட்ட ஸ்கூட்டர்கள் வழங்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்தார். கோரிக்கைகளை பரிசீலனை செய்து நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் உறுதியளித்தார்.




