Close
மார்ச் 7, 2026 4:25 மணி

நாமக்கல் மாவட்டத்தில் ரூ. 125.80 கோடி மதிப்பில் திட்டப்பணிகள்: கண்காணிப்பு அலுவலர் ஆய்வு..!

நாமக்கல் மாநகராட்சிப் பகுதியில் நடைபெற்று வரும் ரோடு அமைக்கும் பணிகளை, மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆசியா மரியம் ஆய்வு செய்தார். அருகில் கலெக்டர் துர்காமூர்த்தி, மாநகராட்சி கமிஷனர் சிவகுமார் ஆகியோர்.

நாமக்கல்:

நாமக்கல் மாவட்டத்தில் ரூ. 125.80 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

நாமக்கல் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை இயக்குநர் ஆசியா மரியம், நாமக்கல் மாநகராட்சிக்குட்பட்ட வார்டு எண் 8 மற்றும் 11 ஆகிய பகுதிகளில் சிறப்பு ரோடுகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ. 70.70 லட்சம் மதிப்பீட்டில் ரோடு அமைக்கும் பணியினையும், பெரியபட்டியில் ரூ. 57.50 லட்சம் மதிப்பீட்டில் திட்டக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் நுண்ணுயிர் உரம் தயாரிக்கும் மையம் கட்டுமானப் பணியினையும்,

நாமக்கல் மாநகராட்சியில் விரிவான சாலை உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ. 118.50 கோடி மதிப்பீட்டில் சுற்றுவட்டச் சாலை அமைக்கும் பணியினையும், புதுச்சத்திரம் ஊராட்சி ஒன்றியம், மின்னாம்பள்ளியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தின் கீழ் ரூ. 17.25 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும். புதிய அங்கன்வாடி மையம் கட்டுமான பணிகளையும்,

தத்தாதிரிபுரம் அரசு உயர்நிலைப்பள்ளியில் நபார்டு திட்டத்தின் கீழ், ரூ. 117.43 லட்சம் மதிப்பீட்டில் 4 கூடுதல் வகுப்பறை, ஆண், பெண் கழிப்பறைகள், குடிநீர் தொட்டி ஆகிய பணிகள் நடைபெற்று வருவதையும், அதே பகுதியில் முதலமைச்சரின் கிராம சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் தாத்தையங்கார்பட்டி தெருவில் ரூ. 110 லட்சம் மதிப்பீட்டில் சாலை மேம்பாட்டு பணிகள் நடைபெற்று வருவதையும் கண்காணிப்பு அலுவலர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

தொடர்ந்து, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மொத்தம் ரூ. 125.80 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப் பணிகளை கண்காணிப்பு அலுவலர் ஆசியா மரியம் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார். அப்போது, பணிகளை ஒப்பந்த காலத்திற்குள் முடித்து பயன்பாட்டிற்கு வழங்கிட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

முன்னதாக, நாமக்கல் மாநகராட்சி, முதலைப்பட்டியில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் பொதுமக்களிடமிருந்து மனுக்கள் பெறுவதை அவர் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.
நாமக்கல் கலெக்டர் துர்காமூர்த்தி முன்னிலையில் நடைபெற்ற ஆய்வில், மாநகராட்சி கமிஷனர் சிவகுமார், டிஆர்டிஏ திட்ட இயக்குநர் வடிவேல் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top