நாமக்கல்:
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அரசு ரத்த மையங்களின் மூலமாக 2024 ஆம் ஆண்டில் 8,850 யூனிட் ரத்தம் தானமாக பெறப்பட்டுள்ளதாக கலெக்டர் தெரிவித்தார்.
சர்வதேச ரத்த கொடையாளர் தினத்தை முன்னிட்டு, ரத்த தானம் செய்தேர்களுக்கான பாராட்டு விழா, நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. கலெக்டர் துர்காமூர்த்தி நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து, 38 தன்னார்வ ரத்த தானம் அளித்தோர்களுக்கு நினைவு பரிசுகளை வழங்கிப் போரட்டினார். மேலும், 73 முறை ரத்த தானம் வழங்கிய டாக்டர் கண்ணனுக்கு, வாழ்நாள் தன்னார்வ ரத்த தான கொடையாளர் விருதினை வழங்கினார்.

பின்னர் அவர் நிகழ்ச்சியில் பேசியதாவது:
நாமக்கல் மாவட்டத்தில் அரசு ரத்த மையங்களின் மூலமாக, 2024 ஆம் ஆண்டில் மொத்தம் 8,850 யூனிட்கள் தானமாக பெறப்பட்டுள்ளது. அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரி ரத்த மையத்தில் மட்டும் 5,393 யூனிட்கள் தானமாக பெறப்பட்டுள்ளது. இதில் 3,059 யூனிட்கள் கர்ப்பிணி தாய்மார்களுக்கும், 5,97 யூனிட்கள் விபத்து மற்றும் அவசர சிகிச்சை, அறுவை சிகிச்சை, பொது மருத்துவம் போன்ற மற்ற பிரிவுகளுக்கும் வழங்கப்பட்டுள்ளது என கூறினார்.
நிகழ்ச்சியில், அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் சாந்தாஅருள்மொழி, சுகாதாரப் பணிகள் இணை இயக்குனர் ராஜ்மோகன், மாவட்ட சுகாதார அலுவலர் பூங்கொடி, மாவட்ட ரத்த மைய அலுவலர் அன்புமலர், மாவட்ட திட்ட மேலாளர் செல்வகுமார், ரெட் கிராஸ் செயலாளர் ராஜேஸ்கண்ணன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.




