Close
செப்டம்பர் 20, 2024 1:44 காலை

புதுக்கோட்டை அருகே பயனாளிகளுக்கு ஆடுகள் வழங்கிய அமைச்சர்கள்

புது்க்கோட்டை

புதுக்கோட்டை அருகே வடவாளத்தில் பயனாளிகளுக்கு வெள்ளாடு வழங்கிய அமைச்சர்கள் அனிதாராதாகிருஷ்ணன், ரகுபதி, மெய்யநாதன் உள்ளிட்டோர்

புதுக்கோட்டை ஊராட்சி ஒன்றியம், வடவாளம் ஊராட்சியில் மாவட்ட ஆட்சியர் கவிதாராமு தலைமையில் ,  சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்ட அமைச்சர் .எஸ்.ரகுபதி, சுற்றுச்சூழல், காலநிலை மாற்றத்துறை மற்றும் இளைஞர்நலன், விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் .சிவ.வீ.மெய்யநாதன் ஆகியோரது முன்னிலையில்  நடைபெற்ற நிகழ்வில், மீன்வளம், மீனவர் நலத்துறை, கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் பங்கேற்று பயனாளிகளுக்கு வெள்ளாடுகள், செம்மறியாடுகளை  (09.04.2022) வழங்கினார்.

நிகழ்ச்சியில் சட்ட அமைச்சர் ரகுபதி பேசியதாவது;

விவசாயம் சார்ந்த குடும்பங்களை பொருளாதாரத்தில் மேம்பாடு அடையும் வகையில் பல்வேறு திட்டங்களை முதலமைச்சர் செயல்படுத்தி வருகிறார்.  ஊரக பகுதிகளில் வசிக்கும் ஏழ்மை நிலையிலுள்ள விதவைகள், கணவனால் கைவிடப்பட்ட, ஆதரவற்ற பெண் பயனாளிகளுக்கு வெள்ளாடுகள்-செம்மறியாடுகள் வழங்கி பெண்களை தொழில் முனைவோராக உருவாக்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
இத்திட்டத்தின் மூலம் வழங்கப்படும் ஆடுகளின் எண்ணிக்கை வருங்காலங்களில் அதிகரித்து, அவற்றை விற்பனை செய்வதன் மூலம் பயனாளிகள் அனைவரும் தங்களை தொழில் முனைவோராக்கிக்கொள்ள வேண்டும்.  மகளிர் சுயஉதவிக் குழுவினர் பெற்ற கடன்களை தள்ளுபடி செய்ததுடன், புதிதாக தொழில் தொடங்க புதிய கடன்களையும் தமிழக அரசு வழங்கி வருகிறது..
எனவே மகளிர் அனைவரும் இத்திட்டங்கள் மூலம் தங்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்திக்கொள்ள வேண்டும் என்றார்.

 மீன்வளம், மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதாராதாகிருஷ்ணன்  பேசியதாவது;
சட்டசபையில்  முதல்வரால் அறிவிக்கப்பட்ட சிறப்பு திட்டமான, ஊரக பகுதிகளில் வசிக்கும் ஏழ்மை நிலையி லுள்ள விதவைகள், கணவனால் கைவிடப்பட்ட, ஆதரவற்ற 38,800 பெண் பயனாளிகளுக்கு 1,94,000 வெள்ளாடுகள்- செம் மறியாடுகள் வழங்கி பெண்களை தொழில் முனைவோராக உருவாக்கும் திட்டம் ரூ.75.63 கோடி மதிப்பீட்டில் தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இத்திட்டத்தில் பெண்களுக்கு வழங்கப்படும் ஆடுகளில் அரசு செலவில் இலவசமாக 2 வருடங்களுக்கு காப்பீடும் செய்து, இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. முதலமைச்சர்  உத்தரவின்படி  புதுக்கோட்டை மாவட்டத்தில் முதல்முறையாக இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

 புதுக்கோட்டை மாவட்டத்தில் ஒரு ஊராட்சி ஒன்றியத்திற்கு 100 பெண் பயனாளிகள் வீதம் 13 ஊராட்சி ஒன்றியத்திற்கு 1,300 பெண் பயனாளிகளுக்கு 100 சதவீதம் மானியத்தில் 6,500 வெள்ளாடுகள் – செம்மறியாடுகள் ரூ.2,27,50,000 மதிப்பீட்டிலும், காப்பீட்டுக் கட்டணம் ரூ.7,02,975 மதிப்பீட்டிலும், தீவன செலவு ரூ.13,00,000 மதிப்பீட்டிலும், சில்லறை செலவினம் ரூ.97,500 மதிப்பீட்டிலும் என ஆகமொத்தம் ரூ.2,48,50,475 மதிப்பீட்டில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் மூலம் ஆடுகள் பெற்ற பயனாளிகள் அனைவரும் ஆடுகளை முறையாக வளர்த்து தங்களை ஒரு தொழில் முனைவோராக மாற்றிக்கொண்டு சமுதாயத்தில் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்திக்கொள்ள முடியும் என்றார்.

 சுற்றுச்சூழல்துறை அமைச்சர் மெய்யநாதன்  பேசியதாவது;
விவசாயிகளின் வாழ்வாதாரம் மேம்படும் வகையில் பல்வேறு திட்டங்களை முதலமைச்சர் செயல்படுத்தி வருகிறார். மேலும் கிராமப்புறங்களில் உள்ள ஏழை, எளிய கணவனை இழந்த பெண்களை குடும்ப தலைவராக கொண்ட குடும்பங்களை தொழில் முனைவோராக்கும் வகையில்  பெண் பயனாளிகளுக்கு வெள்ளாடுகள் – செம்மறியாடுகள் வழங்கி பெண்களை தொழில் முனைவோராக உருவாக்கும் திட்டம் தமிழகத்திலேயே முதல் முறையாக புதுக்கோட்டை மாவட்டத்தில் செயல்படுத்தப்படுகிறது. இதன்மூலம் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 1,300 குடும்பங்களை சார்ந்த பெண்கள் பயன்பெறுவர் என்றார்.

படகை இழந்த உரிமையாளர்களுக்கு முதல்வரின் பொது நிவாரண நிதி அளிப்பு:

இலங்கை அரசினால் பறிமுதல் செய்யப்பட்டு தற்பொழுது இலங்கையில் பயன்படுத்த இயலாத நிலையிலுள்ள தமிழகத்தை சார்ந்த 125 படகுகளில் 122 படகு உரிமையாளர்களுக்கு வாழ்வாதாரத்தினை காத்திடும் பொருட்டு, 108 விசைப்படகு உரிமையாளர்களுக்கு தலா ரூ.5,00,000 மற்றும் 14 நாட்டுப்படகு உரிமையாளர்களுக்கு தலா ரூ.1,50,000 என ஆக மொத்தம் ரூ.5.61 கோடி  முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து நிவாரணம் வழங்க ஒப்பளிப்பு செய்து ஆணை வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி, புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த 33 விசைப்படகுகள் மற்றும் ஒரு நாட்டுப்படகு என மொத்தம் 34 படகு உரிமையாளர்களிடம் ரூ.1,66,50,000 மதிப்பிலான காசோலைகளை அமைச்சர்கள் வழங்கினர்.

இதில் புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் டாக்டர்.வை.முத்துராஜா, முன்னாள் அரசு வழக்கறிஞர் திரு.கே.கே.செல்லபாண்டியன், கால்நடைத்துறை மண்டல இணை இயக்குநர் மரு.சம்பத், மாவட்ட வருவாய் அலுவலர் மா.செல்வி, வருவாய் கோட்டாட்சியர் (பொ) கருணாகரன்.

மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் ஜெயலட்சுமி, ஒன்றியக்குழுத் தலைவர் பி.சின்னையா, ஒன்றியக் குழு உறுப்பினர் கலியமுத்து, மீன்வளத்துறை மண்டல துணை இயக்குநர் ஷர்மிளா, உதவி இயக்குநர் (மீன்வளம்) சின்னகுப்பன், ஊராட்சிமன்றத் தலைவர் அருள் சிறுமலர் ஞானபிரகாசம் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top