Close
செப்டம்பர் 20, 2024 3:48 காலை

சிலிண்டர் டெலிவரிக்கு கட்டாயம் பணம் கொடுக்க வேண்டுமா… உண்மைதான் என்ன!

தமிழ்நாடு

சமையல் எரிவாயு உருளை

நம் வீட்டுக்கு கொண்டு வரப்படும் சிலிண்டர் டெலிவரிக்கு  கட்டாயம் பணம் கொடுக்க வேண்டுமா ? இல்லையா ?  உண்மையான  நிலவரம்  இதுதான்.

கேஸ் சிலிண்டர் விலை கடுமையாக உயர்ந்து குடும்பங்களுக்கு ஏற்கெனவே நெருக்கடி கொடுத்து வருகிறது. இதற்கு மத்தியில் சிலிண்டர் டெலிவரி ஊழியர்கள் கூடுதல் பணம் கேட்டு இம்சை செய்வதாக வாடிக்கையாளர்கள் புகார் கூறுகின்றனர். இதனால் குடும்பங்களுக்கு என்ன பாதிப்பு? டெலிவரி ஊழியர்கள் சொல்வது என்ன? வரம்பு மீறினால் புகார் தெரிவிப்பது எப்படி?

சிலிண்டர் விலை அண்மைக்காலமாக கடுமையாக உயர்ந்துள்ளது. சென்னையில் தற்போது ஒரு சிலிண்டர் விலை தற்போது 1050  ரூபாயாக உள்ளது. இதனால் ஏற்கெனவே பொதுமக்கள் நெருக்கடியை சந்தித்து வருகின்றனர்.

​டெலிவரி கட்டணம்:சிலிண்டர் விலையே உயர்வாக இருக்கும் நிலையில் டெலிவரி ஊழியர்கள் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக பொதுமக்கள் புகார் கூறுகின்றனர். இதனால் ஒரு சிலிண்டருக்கு 1000 ரூபாய்க்கு மேல் பணம் செல்வாகிறது என கூறுகின்றனர். டெலிவரி ஊழியர்கள் 30 ரூபாய் முதல் 80 ரூபாய் வரை சராசரியாக வசூலிப்பதாக வாடிக்கையாளர்கள் கூறுகின்றனர்.

​வாடிக்கையாளர்கள் குழப்பம்: ஒவ்வொரு ஏரியாவிலும் வாடிக்கையாளர்கள் வெவ்வேறு கட்டணங்களை டெலிவரி ஊழியர்களுக்கு வழங்கி வருகின்றனர். எனவே, இதில் உண்மையான நிலைமை  என்ன என்பதை தெரிந்துகொள்ளலாம் .

​டெலிவரி கட்டணமே கிடையாது:சிலிண்டர் டெலிவரிக்கு என தனி கட்டணம் கிடையாது. நாம் செலுத்தும் சிலிண்டர் கட்டணத்திலேயே (1050  ரூபாய்) டெலிவரி கட்டணமும் உள்ளடங்குகிறது. எனவே கூடுதல் கட்டணம் செலுத்த தேவையில்லை.

​கட்டணம் இல்லை, டிப்ஸ் மட்டுமே:சிலிண்டர் கட்டணம் தவிர நாம் செலுத்தும் கூடுதல் பணம் நாமாக விருப்பப்பட்டு கொடுக்கும் டிப்ஸ் மட்டும்தான் எனவும், முறைப்படி டெலிவரிக்கு கட்டணம் கிடையாது.

​கட்டணத்தை குறைக்கலாம்: டெலிவரியே இல்லாமல் நாமாக சென்று சிலிண்டரை பெற்றுக்கொண்டால் கட்டணத்தை குறைக்கலாம். அதாவது, தற்போது ஒரு சிலிண்டர் 1050 ரூபாய். இந்த சிலிண்டர் டெலிவரி செய்யப்படாமல் நாமே சென்று எடுத்துக் கொண்டால் சுமார் 17 ரூபாய் குறைத்து போக மீதமுழ்ழ தொகையை  மட்டும் செலுத்தலாம். ஆனால், இதை பல ஏஜென்சிகள் வழங்குவதில்லை என்பதே உண்மை நிலை.

​இவர்களுக்கு டெலிவரி கட்டணம் கட்டாயம்: எனினும், 5 கிலோ மீட்டர் சுற்றளவுக்குள் மட்டுமே டெலிவரிக்கு கட்டணம் கிடையாது. 5 கிலோமீட்டருக்கு மேல் டெலிவரிக்கு 30 ரூபாய் கட்டணம் செலுத்தினால் போதும். ஆனால், 5 கிலோ மீட்டருக்குள் டெலிவரி செய்வோரும் கூடுதல் கட்டணம் கேட்கிறார்கள் என்பதே பொதுமக்களின் புகார்.

சில இடங்களில் டெலிவரி கட்டணம் செலுத்தவில்லை என்றால் சில டெலிவரி ஊழியர்கள் மிரட்டுவது, அலட்சியமாக நடந்துகொள்வது, வாசலிலேயே சிலிண்டரை வைத்துவிட்டு செல்வது என மோசமாக நடந்துகொள்வதாகவும் வாடிக்கையாளர்கள் புகார் கூறுகின்றனர்.

சிலிண்டரை வீட்டுக்கு வந்து டெலிவரி செய்வது மட்டுமல்லாமல் அந்த சிலிண்டரை அடுப்பில் ஃபிட்டிங் செய்து கசிவு இல்லாமல் இருக்கிறதா என்பதை சரிபார்க்க வேண்டியதும் டெலிவரி ஊழியரின் வேலை . இதற்காக எந்தவொரு கூடுதல் கட்டணமும் செலுத்த தேவையில்லை.

​புகார் தெரிவிக்க..

இதற்கு மேல் டெலிவரி ஊழியர் கட்டணம் கேட்டு வம்பு செய்தாலோ, மோசமாக நடந்துகொண்டாலோ நீங்கள் சிலிண்டர் வாங்கும் ஏஜென்சியிடமே புகார் தெரிவிக்கலாம். அப்போதும் நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் வாடிக்கையாளர் சேவை மையத்தை அழைத்து புகார் தெரிவிக்கலாம் .

​டெலிவரி ஊழியர்கள் சந்திக்கும் பிரச்னை: சிலிண்டருக்கான டெலிவரி செலவுகளுக்கு சம்பந்தப்பட்ட விநியோகஸ்தர் கள்தான் பணம் வழங்க வேண்டும். ஆனால் பெரும்பாலான விநியோகஸ்தர்கள் பணம் வழங்குவதில்லை. எனவே பொதுமக்களிடம் பணம் கேட்கவேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top