Close
செப்டம்பர் 19, 2024 11:08 மணி

புதுக்கோட்டை புத்தகத் திருவிழா வாசகர்களின் பேராதரவுடன் நிறைவு

புதுக்கோட்டை

புதுக்கோட்டை புத்தக திருவிழாவில் மாவட்ட ஆட்சியர் கவிதாராமுவுக்கு புத்தக பெட்டகம் அளிக்கும் புத்தகத்திருவிழா நிர்வாகிகள்

புதுக்கோட்டை புத்தகத் திருவிழா எழுத்தாளர்கள், கலைஞர்கள், வாசகர்கள், மாணவர்கள், பொதுமக்களின் பேராதரவுடன் விற்பனை இலக்கை எட்டி சாதனை படைத்துள்ளது.

புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகமும், தமிழ்நாடு அறிவியல் இயக்கமும் இணைந்து 5-ஆவது புதுக்கோட்டை புத்தகத் திருவிழாவை ஜூலை 29 முதல் ஆகஸ்ட் 7-ஆம் தேதிவரை புதுக்கோட்டை நகர்மன்றத்தில் நடத்தியது. மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் தங்கம்மூர்த்தி, நா.முத்துநிலவன், அ.மணவாளன், ஆர்.ராஜ்குமார், எஸ்.டி.பாலகிருஷ்ணன், எம்.வீரமுத்து, மு.முத்துக்குமார், விமலாவள்ளல், மு.கீதா ஆகியோர் ஒருங்கிணைப்பாளர் களாக   செயல்பட்டனர்.

புதுக்கோட்டை மாவட்டம் மட்டுமல்லாது, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து எழுத்தாளர்கள், கலைஞர்கள், வாசகர்கள், மணாவர்கள், பொதுமக்கள் என அனைத்துத் தரப்பினரும் பத்துநாட்களும் புத்தகத் திருவிழாவை நோக்கி படையெடுத்து வந்தனர்.

காலையில் மாணவர்களுக்கான அறிவியல் நிகழ்ச்சிகள், விஞ்ஞானிகளுடன் கலந்துரையாடல், கோளரங்கம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. புத்தகத் திருவிழாவில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் பங்கேற்றுள்ளனர்.

முதல் நாள் மாலையில் நடைபெற்ற இலக்கியச் சொற்பொழிவில் ஒடிசா மாநில முதல்வரின் சிறப்பு ஆலோசகர் ஆர்.பாலகிருஷ்ணன் உரையாற்றினார். தொடர்ந்து தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், திரைக்கலைஞர் ரோகிணி, ஊடகவியலாளர் க.கார்த்திக்கேயன், மேனாள் சட்டமன்ற உறுப்பினர் க.பாலபாரதி, விஞ்ஞானி த.வி.வெங்கடேஸ்வரன்.

பேராசிரியர் கோ.ப.நல்லசிவன், பேராசிரியர் அப்துல்காதர், எழுத்தாளர் ஆதவன் தீட்சண்யா, மேனாள் துணைவேந்தர் சொ.சுப்பையா, திட்டக்குழுத் துணைத் தலைவர் ஜெயரஞ்சன், நாட்டியக்கலைஞர் நர்த்தகி நடராஜ், ஊடகவியலாளர் கோபிநாத் என இறுதியாக நீதியரசர் சந்துருவின் சிறப்புரையோடு புத்தகத் திருவிழா நிறைவு பெற்றது.

சிறந்த நூல்களுக்கான விருதுகள் வழங்கல், பள்ளி மாணவர்களுக்கு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கல், புத்தகங்கள் வெளியீடு;, சாதனையாளர்கள் கவுரவிப்பு, பள்ளி மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள் என தொடர்ந்து புத்தகத் திருவிழாவை நோக்கி வாசர்களை இழுத்துவருவதற்கான பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.
ரூ. 2 கோடிக்கு புத்தகங்கள் விற்பனை:

புத்தகத் திருவிழாக்குழுவின் தலைவரும், மாவட்ட ஆட்சியருமான கவிதா ராமு பேசியது: புதுக்கோட்டை மாவட்ட மக்களுக்கு உண்மையிலேயே ஒரு முக்கியமான திருவிழா. 10 நாட்கள் நடைபெற்ற புதுக்கோட்டை புத்தகத் திருவிழாவில் ரூ.2 கோடிக்கு புத்தகங்கள் விற்பனையாகியுள்ளன. ஒரு லட்சம் பொதுமக்களும், ஒரு லட்சம் மாணவ, மாணவிகளும் புத்தகத் திருவிழாவுக்கு வந்து சென்றுள்ளனர். கோளரங்கத்தை 25 ஆயிரம் பேர் பார்த்துள்ளனர் என்றார் கவிதா ராமு.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top