Close
செப்டம்பர் 20, 2024 1:34 காலை

அங்கீகரிக்கப்பட்ட தற்காலிக- நிரந்தர பட்டாசு கடைகளில் மட்டுமே விற்பனை

புதுக்கோட்டை

அங்கீகாரம் பெற்ற கடைகளில் பட்டாசுகளை வாங்க வேண்டும்

புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசு அனுமதி பெற்ற அங்கீகரிக்கப்பட்ட தற்காலிக மற்றும் நிரந்தர பட்டாசு விற்பனையகங்களில் மட்டுமே பட்டாசுகள் விற்பனை செய்யப்பட வேண்டும்.

தீபாவளி பண்டிகை வருகிற 24-ஆம் தேதி சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது. தீபாவளி பண்டிகை என்றாலே பட்டாசு தான் முதலில் ஞாபகம் வரும். பாதுகாப்பாக எப்படி பட்டாசு வெடிப்பது என்பது குறித்து காவல்துறை அதிகாரிகளும், தீயணைப்பு படை அதிகாரிகளும் மாநிலம் முழுவதும் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். தீபாவளி அன்று காலை 6 மணி முதல் 7 மணி வரையும், இரவு 7 மணி முதல் 8 மணி வரை மட்டுமே பட்டாசு வெடிக்கலாம் என உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

தண்ணீர் வாளி மற்றும் மணலை அருகில் வைத்துக் கொள்வது அவசியம்.குடிசைப் பகுதிகள் இருக்கும் இடத்தில் லட்சுமி வெடி, டைம்பாம், ராக்கெட் போன்ற பட்டாசுகளை வெடிக்க கூடாது. மேலும் சிறுவர்கள் அதிக ஒலி எழுப்பும் பட்டாசுகளை தவிர்க்க வேண்டும்.பட்டாசுகளை வெடிக்கும் போது எளிய கதர் அல்லது காட்டன் ஆடைகளை அணிய வேண்டும். மத்தாப்புகளை கொளுத்தி முடித்த பிறகு பக்கெட் தண்ணீரிலோ அல்லது கால்வாயிலோ அதனை போட வேண்டும்.

நீண்ட ஊதுவத்தி பயன்படுத்தி பட்டாசுகளை வெடிப்பது மிகவும் நல்லது. வெடிக்காத பட்டாசுகளை கட்டாயம் கையில் எடுக்கக் கூடாது.சிறுவர்கள் திறந்த வெளிகளில் பெரியவர்களின் கண்காணிப்போடு தான் பட்டாசுகளை வெடிக்க வேண்டும்.

நாட்டு வெடிகளை பயன்படுத்த கூடாது.குழந்தைகள் தனியாக மொட்டை மாடிகளில் அல்லது குடிசை பகுதி இருக்கும் இடங்களில் பட்டாசுகள் வெடிக்க கூடாது.வெடிகளையும், வெடிக்காத பட்டாசுகளையும் ஒன்றாக சேர்த்து வைத்து வெடிக்க கூடாது.

பட்டாசுகளை கொளுத்தி தெருவிலோ அல்லது மற்றவர்கள் மீதோ வீசி விளையாடுவதால் அசம்பாவிதம் ஏற்படும். எனவே அதையும் தவிர்க்க வேண்டும்.மெழுகுவர்த்தி மற்றும் தீப்பெட்டி மூலமாக பட்டாசுகளை கொளுத்த கூடாது.ஈரமான சாக்குகளை வெடிக்காத பட்டாசுகள் மீது போட்டு அதனை செயலிழக்க செய்வது மிகவும் அவசியம்.மிகவும் முக்கியமாக கேஸ் கிடங்குகள், பட்டாசு கடைகள், உணவு பொருள் சேமிப்பு கிடங்குகள், வைக்கோல் போர், பெட்ரோல் பங்க், மின்சாரம் டிரான்ஸ்பார்மர், மருத்துவமனை, மார்க்கெட் போன்ற முக்கிய பகுதிகளில் வைத்து பட்டாசு வெடிக்க கூடாது. பாதுகாப்பான முறையில் குறிப்பிட்ட நேரத்தில் மட்டும் பட்டாசுகளை வெடித்து அசம்பாவிதம் ஏற்படாமல் தீபாவளியை சிறப்பாக கொண்டாட வேண்டும்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசு அனுமதி பெற்ற அங்கீகரிக்கப்பட்ட தற்காலிக மற்றும் நிரந்தர பட்டாசு விற்பனையகங் களில் மட்டுமே பட்டாசுகள் விற்பனை செய்யப்பட வேண்டும். விற்பனை செய்யப்படும் பட்டாசுகளும் அரசால் அனுமதிக்கப்பட்டதாக இருக்க வேண்டும்.

மேலும் அனுமதி பெற்ற கட்டிடங்களில் மட்டுமே பட்டாசுகள் விற்பனை செய்வதை வணிகர்கள், விற்பனையாளர்கள் மேற்கொள்ள வேண்டும். மேலும் கட்டிடங்களுக்கு வெளியே மற்றும் போக்குவரத்திற்கு இடையூறாகவும் விற்பனை செய்யக்கூடாது.

பொதுமக்கள் வெடிப்பொருட்களை மருத்துவமனைகள், பள்ளிக்கூடங்கள், வழிபாட்டுத் தலங்கள் மற்றும் எளிதில் தீ பிடிக்கும் இடங்கள் ஆகியவற்றின் அருகே வெடிக்கக் கூடாது. அரசினால் அறிவுறுத்தப்பட்டுள்ள குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே வெடிப்பதை பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டும். பிற நபர்களை அச்சுறுத்தும் விதமாகவும், அவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் விதமாகவும் வெடிப்பதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.

அதேபோல் விலங்குகளுக்கும் எவ்வித அச்சுறுத்தலும் இல்லாத வகையில் வெடிப்பதை உறுதி செய்திட வேண்டும். அதிக சப்தம் உண்டாக்கும் தடைசெய்யபட்ட வெடியினை விற்பனை செய்யக்கூடாது மற்றும் பயன்படுத்தக்கூடாது. பொதுமக்கள் நமது சுற்றுச்சூழலின் மாசு, பாதிப்பு உண்டாக்கும் வெடிகளை பயன்படுத்தக்கூடாது.

மாசில்லா மற்றும் விபத்தில்லா பாதுகாப்புடன் கூடிய தீபாவளி என்பதை உறுதிபடுத்தும் விதமாக செயல்படுமாறு மாவட்ட நிர்வகத்தால் கேட்டுக் கொள்ளப்படுகிறது என மாவட்ட ஆட்சித்தலைவர் கவிதா ராமு தெரிவித்துள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top