Close
செப்டம்பர் 20, 2024 4:12 காலை

நண்பர்களுடன் கிணற்றில் குளிக்க சென்ற பிளஸ்-2 மாணவர் தண்ணீரில் மூழ்கி பலி

புதுக்கோட்டை

பொன்னமராவதியில் கிணற்றில் மூழ்கி மாணவர் பலி

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே நண்பர்களுடன் கிணற்றில் குளிக்க சென்ற பிளஸ்-2 மாணவர் தண்ணீரில் மூழ்கி பலியானார்.

பொன்னமராவதி ஒன்றியம் சொக்கநாதபட்டி பகுதியை சேர்ந்த ஹோட்டல் தொழிலாளி புகழேந்தி. இவருடைய மகன் யோகேஸ்வரன் (17). இவர் ஆலவயல் அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். நேற்று முன்தினம் பொதுத்தேர்வு எழுதியுள்ளார்.

இந்தநிலையில் யோகேஸ்வரன் நேற்று கொப்பனாப்பட்டியில் உள்ள ஒரு முடி திருத்தம் கடையில் தனது நண்பர்கள் 3 பேருடன் முடி திருத்தம் செய்து கொண்டு தேனீக்கண்மாய் பகுதியில் பழனிச்சாமி என்பவருக்கு சொந்தமான கிணற்றில் நண்பர்களுடன் குளித்துக் கொண்டிருந்தார். அப்போது யோகேஸ்வரன் தண்ணீரில் மூழ்க தொடங்கினார்.

இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அவரது நண்பர்கள் யோகேஸ்வரனை மீட்க முயன்றனர். ஆனால் முடியவில்லை. இதையடுத்து அவர்கள் உடனடியாக போலீசாருக்கும், தீயணைப்பு துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில் பொன்னமராவதி தீயணைப்பு நிலைய அலுவலர் சந்தானம் தலைமையிலான வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் தீயணைப்பு வீரர்கள் கிணற்றில் இறங்கி யோகேஸ்வரனை தேட ஆரம்பித்தனர்.

சுமார் ½ மணி நேர போராட்டத்திற்கு பின்பு யோகேஸ்வரனை பிணமாக மீட்டனர். இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து பொன்னமராவதி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top