Close
செப்டம்பர் 20, 2024 3:57 காலை

புதுக்கோட்டையில் 110 பேருக்கு தாலிக்கு தங்கம்- திருமண நிதியுதவி: அமைச்சர் மெய்யநாதன் வழங்கல்

புதுக்கோட்டை

புதுக்கோட்டை நடைபெற்ற விழாவில் பயனாளிக்கு தாலிக்கு தங்கம், நிதியுதவி அளிக்கிறார், அமைச்சர் சி.வீ. மெய்யநாதன்

புதுக்கோட்டை மாவட்டத்தைச் சார்ந்த 110 பயனாளிகளுக்கு திருமண நிதியுதவி மற்றும் 8 கிராம் தாலிக்கு தங்கத்தினை சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் வழங்கினார்.

புதுக்கோட்டை ஆயுதப்படை திருமண மண்டபத்தில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் மாவட்ட வருவாய் அலுவலர் .மா.செல்வி தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் (26.03.2023) கலந்து கொண்டு,  110 பயனாளிகளுக்கு, ரூ.1,02,00,760 மதிப்பிலான திருமண நிதியுதவி மற்றும் தாலிக்கு தங்கத்தினை வழங்கினார்.

பின்னர், அமைச்சர் கூறியதாவது;தமிழ்நாடு முதலமைச்சர் பெண்களின் முன்னேற்றத்திற்காக எண்ணற்றத் திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருகிறார். அதன்படி சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை மூலம் பெண்களுக்கு பல்வேறு நலத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன்மூலம் பெண்களின் பெருளாதாரம் மற்றும் வாழ்க்கைத் தரம் உயர்வதற்கு வழிவகை ஏற்படுகிறது.

தமிழக அரசின் சார்பில், டாக்டர் தர்மாம்பாள் அம்மையார் நினைவு விதவை மறுமண நிதியுதவித் திட்டம், ஈ.வெ.ரா.மணியம்மையார் நினைவு ஏழை விதவையர் மகள் திருமண நிதியுதவித் திட்டம், அன்னை தெரசா நினைவு ஆதரவற்ற பெண்களுக்கான திருமண நிதியுதவித் திட்டம் மற்றும் டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி நினைவு கலப்புத் திருமண நிதியுதவித் திட்டம் ஆகிய திட்டங்களின்கீழ், திருமண நிதியுதவி மற்றும் 8 கிராம் தங்கம் வழங்கும் நிகழ்ச்சிஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

அதன்படி, புதுக்கோட்டை மாவட்டத்தில் பட்டம் மற்றும் பட்டயம் படித்த 107 பெண்களின் திருமணத்திற்கு தலா ரூ.50,000 வீதம் மற்றும் தலா 8 கிராம் தங்கம் வீதம் ரூ.53,50,000 மதிப்பிலான திருமண நிதியுதவியும், ரூ.46,45,512 மதிப்பிலான 856 கிராம் தங்கமும், ஏனைய 10 ஆம் வகுப்பு வரை படித்த 3 பெண்களுக்கு ரூ.25,000 வீதம் மற்றும் தலா 8 கிராம் தங்கம் வீதம் ரூ.75,000 மதிப்பிலான திருமண நிதியுதவியும், ரூ.1,30,248 மதிப்பிலான 24 கிராம் தங்கமும் என ஆகமொத்தம் 110 பயனாளிகளுக்கு ரூ.54,25,000 மதிப்பிலான திருமண நிதியுதவியும், ரூ.47,75,760 மதிப்பிலான 880 கிராம் தங்கமும் பயனாளிகளுக்கு இன்றையதினம் வழங்கப்பட்டது.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் 2023-24 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில், இந்தியாவிலேயே வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1,000 வழங்கும் மகத்தான திட்டத்தினை அறிவித்துள்ளார்கள். இதன்மூலம் பல்வேறு ஏழை, எளிய குடும்பங்களின் பொருளாதாரம், வாழ்வாதாரம் உள்ளிட்டவைகள் உயர்வதற்கு வழிவகை ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் நகரப் பேருந்துகளில் மகளிர் இலவச பேருந்து பயணத் திட்டம், உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு ரூ.1,000 வழங்கும் திட்டம், மகளிர் சுயஉதவிக் குழுவினர்களுக்கு வங்கி கடன் உதவி மற்றும் தள்ளுபடி உள்ளிட்ட பல்வேறு பெண்கள் முன்னேற்றத் திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்கள். இதன்மூலம் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு பெண்களின் ஆதரவு மென்மேலும் உயர்ந்து நிற்கிறது.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பெண்களின் பொருளாதார முன்னேற்றத் தேவைகளை நன்கு அறிந்துகொண்டு, தமிழகத்தில் திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். இத்தகைய நலத்திட்டங்கள் பெறும் பெண்கள் அனைவரும் இதனை தங்களது வாழ்வின் முன்னேற்றத்திற்கு பயன்படுத்திக்கொள்ள வேண்டும். தமிழக அரசால் செயல்படுத்தப்படும் இதுபோன்ற திட்டங்களை அரசு அலுவலர்கள் நல்ல முறையில் செயல்படுத்தி, பெண்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என மாண்புமிகு சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் திரு.சிவ.வீ.மெய்யநாதன் அவர்கள் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில், புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் டாக்டர்.வை.முத்துராஜா அவர்கள், புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் திரு.முருகேசன், மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் திருமதி.த.ஜெயலட்சுமி, புதுக்கோட்டை நகர்மன்றத் தலைவர் திருமதி.திலகவதி செந்தில், திருவரங்குளம் ஒன்றியக்குழுத் தலைவர் திருமதி.வள்ளியம்மை தங்கமணி, மாவட்ட சமூக நல அலுவலர் (பொ) திருமதி.எம்.சியாமளா, வட்டாட்சியர் திருமதி.விஜயலெட்சுமி, சமூக நலத்துறை தொழில் கூட்டுறவு அலுவலர் திரு.மனோகரன், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்;

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top