Close
செப்டம்பர் 20, 2024 1:40 காலை

தேசிய பூப்பந்தாட்டப் போட்டிகளில் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றிய தமிழக அணி

சென்னை

தேசிய பூப்பந்தாட்டப் போட்டிகளில் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றிய தமிழக அணிக்கு சென்னை ரயில் நிலையத்தில் உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது

மராட்டிய மாநிலம் முர்த்திசப்பூரில் நடைபெற்ற தேசிய அளவிலான பூப்பந்து போட்டிகளில் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை வென்ற வீரர், வீராங்கனைகளுக்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் புதன்கிழமை உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

67-ஆவது தேசிய ஜூனியர் பூப்பந்தாட்ட போட்டிகள் மகாராஷ்டிரா மாநிலம், அகோலா மாவட்டத்தில் உள்ள முர்த்திசப்பூர் என்ற இடத்தில் கடந்த மார்ச் 30 -ஆம் தேதி முதல் ஏப்ரல் 3 -ஆம் தேதி வரை நடைபெற்றது.

இதில் நாட்டின் பெரும்பாலான மாநிலங்களின் சார்பில் 28 அணிகள்  பங்கேற்றன.   ஐந்து பிரிவுகளில் நடைபெற்ற போட்டிகளில் தமிழ்நாடு பூப்பந்தாட்ட கழக வீரர்கள், வீராங்கனைகள் நான்கு போட்டிகளில் முதல் இடத்திலும், ஒரு போட்டியில் மூன்றாம் இடத்தையும் பெற்று ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினர்.

இப்போட்டிகளில் பங்கேற்பதற்கான தகுதிச் சுற்று போட்டிகள் சில மாதங்களுக்கு முன்பு திருவொற்றியூரில் நடைபெற்றது. இதில் மாநில அளவில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகளைக் கொண்ட தமிழக அணி தேர்வு செய்யப்பட்டது.

இந்த அணியைச் சேர்ந்த 20 வீரர், வீராங்கனைகள், 4 பயிற்சியாளர்கள் முர்த்திசப்பூரில் நடைபெற்ற தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்றனர். ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தைப் பெற்ற வீரர், வீராங்கனைகள் ரயில் மூலம் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு புதன் கிழமை அதிகாலை வந்தடைந்தனர் .

அவர்களுக்கு தமிழ்நாடு மாநில பூப்பந்தாட்ட கழகம் மற்றும் திருவள்ளூர் மாவட்ட பூப்பந்தாட்ட கழகம் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

இதில் தமிழ்நாடு மாநில பூப்பந்தாட்ட கழக செயலாளர் வி. எழிலரசன், திருவள்ளூர் மாவட்ட பூப்பந்தாட்ட கழக தலைவர் எம் மதியழகன் மற்றும் கே.சுப்பிரமணி, நந்தா, தயாளன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top