Close
செப்டம்பர் 20, 2024 3:45 காலை

ஆவுடையார்கோவில் ஊராட்சி ஒன்றிய வளர்ச்சி பணிகள்: ஆட்சியர் ஆய்வு

புதுக்கோட்டை

ஆவுடையார்கோவில் ஒன்றியத்தில் வளர்ச்சிப்பணிகளை ஆய்வு செய்த ஆட்சியர் மெர்சி ரம்யா

புதுக்கோட்டை மாவட்டம்,ஆவுடையார்கோவில் ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோவில் ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில், பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை, ஆட்சியர் மெர்சி ரம்யா  (02.08.2023) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர்  ஆட்சியர்  தெரிவித்ததாவது:

கிராமப்புறங்களின் வளர்ச்சியில் அதிக முக்கியத்துவம் கொடுத்து முதலமைச்சர்  திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். அதன்படி ஆவுடையார்கோவில் ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்யப்பட்டது.

அதன்படி, ஆவுடையார்கோவில் ஊராட்சி ஒன்றியம், புண்ணியவயல் ஊராட்சியில், பழந்தாமரை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மற்றும் கருப்பூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிகளில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின்கீழ், தலா ரூ.7.43 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுவரும் சமையலறை கூடத்தின் கட்டுமானப் பணிகள் ஆய்வு செய்யப்பட்டது.

இப்பணிகளை நல்ல முறையில் விரைந்து முடித்திடவும், இதுபோன்று ஆவுடையார்கோவில் ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் கட்டப்பட்டுவரும் சமையலறை கூட கட்டுமானப் பணிகளையும் உரிய காலத்திற்குள், முதலமைச்சர் காலை உணவுத் திட்டத்தின்கீழ் பயன் பெறுவதற்கு ஏற்ற வகையில் முடித்திட தொடர்புடைய அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதனைத்தொடர்ந்து, புண்ணியவயல் ஊராட்சியில், பாரத பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தின்கீழ், ரூ.2.40 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுவரும் காளியம்மாள் முருகன் பயனாளியின் வீட்டு கட்டுமானப் பணிகள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்யப்பட்டது.

இப்பணிகளை உரிய காலத்திற்குள் விரைந்து முடித்திட அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் முதல்வரின் கிராம சாலைகள் அபிவிருத்தி திட்டத்தின்கீழ், ரூ.71.81 லட்சம் மதிப்பீட்டில் 1.8 கி.மீட்டர் நீளத்திற்கு பாண்டிபத்திரம் – பூங்குடி கிராம இணைப்பு சாலை அமைக்கப்பட்டுவரும் பணியினை பார்வையிட்டு ஆய்வு செய்யப்பட்டது.

இப்பணிகளை விரைந்து முடித்து இப்பகுதி கிராம மக்களின் போக்குவரத்திற்கு கொண்டுவர தொடர்புடைய அலுவலர் களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனவே இப்பணிகளை நல்ல முறையில், விரைந்து முடித்து பொதுமக்களின் பயன் பாட்டிற்கு கொண்டுவர தொடர்புடைய அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார் ஆட்சியர் மெர்சி ரம்யா.

இந்த ஆய்வுகளின்;போது, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் நா.கவிதப்பிரியா, மாவட்ட ஊரக வளர்ச் சித்துறை செயற்பொறியாளர் எஸ்.பாலகிருஷ்ணன், ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினர் செந்தில்குமரன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் எஸ்.சீனிவாசன், தமிழ்செல்வன், ஊராட்சிமன்றத் தலைவர் கே.சுரேஷ் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top