Close
செப்டம்பர் 19, 2024 7:04 மணி

கடல்சார் துறையில் ரூ. 10 லட்சம் கோடி முதலீடு ஈர்க்க திட்டம்: மத்திய அமைச்சர் தகவல்

சென்னை

சென்னையில் பேட்டியளித்த மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து, நீர்வழி மற்றும் ஆயுஷ் துறை அமைச்சர் சார்பானந்தா சோனாவால்

கடல்சார் துறையில் ரூ. 10 லட்சம் கோடி முதலீட்டை திரட்டிட திட்டமிட்டுள்ளதாக  மத்திய அமைச்சர் சார்பானந்த சோனாவால் தெரிவித்தார்.

வரும் அக்டோபர் மாதம் புது தில்லியில் நடைபெற உள்ள உலகளாவிய கடல்சார் உச்சி மாநாட்டில் ரூ.10 லட்சம் கோடி முதலீட்டை ஈர்க்க பல்வேறு பணிகள் நடைபெற்று வருவதாக மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து, நீர்வழி மற்றும் ஆயுஷ் துறை அமைச்சர் சார்பானந்தா சோனாவால் திங்கள் கிழமை சென்னையில் தெரிவித்தார்.

மத்திய கப்பல் போக்குவரத்து அமைச்சகம் சார்பில் புது தில்லியில் வரும் அக்டோபர் 17-ஆம் தேதி முதல் 19-ஆம் தேதி வரை 3 நாட்கள் உலகளாவிய கடல் சார் உச்சி மாநாடு நடைபெற உள்ளது. இம்மாநாட்டினை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்க உள்ளார்.

இந்த மாநாடு குறித்து விளக்குவதற்காகவும், முதலீட்டாளர் களை அழைக்கும் வகையிலும் மாநாடு குறித்த சிறப்பு அறிமுக நிகழ்ச்சி சென்னையில் திங்கள் கிழமை நடைபெற்றது.  இதில் மத்திய அமைச்சர் சர்பானந்த சோனாவால் கலந்து கொண்டார். இதில் 500-க்கும் மேற்பட்ட தொழிலதிபர்கள், வர்த்தகர்கள் கலந்து கொண்டனர்.

அப்போது அமைச்சர் சோனாவால் பேசியது,

2016-ம் ஆண்டு முதல் சர்வதேச கடல்சார் உச்சிமாநாடு மும்பையில் நடைபெற்றது. கொரோனா காலத்தில் இரண்டாவது மாநாடு மெய் நிகர் மாநாடாக நடைபெற்ற நிலையில், தற்போது மூன்றாவது உச்சி மாநாடு புது தில்லியில் அக்டோபர் 17, 18, 19  ஆகிய மூன்று நாள்கள் நடைபெற உள்ளது.

முதலீடுகளை பெருமளவு திரட்டி இந்தியாவில் உள்ள துறைமுகங்களின் திறனை சர்வதேச தரத்திற்கு உயர்த்தி இந்தியாவை உலக அரங்கில் முன்னேறிய நாடுகளின் வரிசையில் கொண்டு செல்வது தான் மாநாட்டின் நோக்கம் ஆகும்.

2030-ஆம் ஆண்டுக்குள் இந்தியா 5 பில்லியன் டாலர் பொருளாதார வளர்ச்சியை அடைய உள்ள நிலையில் இதற்கேற்றவாறு துறைமுகம், சாலை உள்ளிட்ட கட்டமைப்பு வசதிகளையும் மேம்படுத்த வேண்டியது அவசியமானதாகும்.
இந்திய துறைமுகங்களில் பல்வேறு புதிய தொழில்நுட்பங் களை புகுத்தி நவீனமயமாக்க வேண்டும் இதற்கான நிதி ஆதாரத்தை பெருக்கும் வகையில் தான் உச்சி மாநாடு நடைபெற உள்ளது.

மாநாட்டில் சுமார் ரூ.10 லட்சம் கோடி முதலீட்டை திரட்ட திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான பணிகளை துறைமுகங் களும் கப்பல் போக்குவரத்து துறை அமைச்சகமும் தொடர்ந்து பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. உலக அளவில் உள்ள  போட்டிகளை சமாளிக்கும் வகையில் இந்திய துறைமுகங்களையும் தயார்படுத்த வேண்டியது அவசிய மாகும்.

தமிழகத்தை பொறுத்தவரை கடல் சார் வரலாற்றில் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது.  மேலும் நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு தமிழ்நாடு எப்போதும் உறுதுணை யாக இருந்து வருகிறது.  தமிழ்நாட்டில் சென்னை, எண்ணூர்  காமராஜர் தூத்துக்குடி வ உ சி உள்ளிட்ட துறைமுகங்களில் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கு கப்பல் போக்குவரத்து அமைச்சகம் தொடர்ந்து முக்கியத்துவம் அளித்து வருகிறது.

சாகர்மாலா திட்டத்தின் கீழ் இந்தியா முழுமைக்கும் செயல்படுத்தப்பட்டு வரும் சுமார் 800  க்கும் மேற்பட்ட திட்டங்களில் 106 திட்டங்கள் இந்த மூன்று துறைமுகங்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

சென்னையை பொறுத்தவரை பன்னாட்டு சுற்றுலா பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது.   இப்போது சென்னை கொழும்பு இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்கப்பட்டு பெரும் வரவேற்பை பெற்றுள்ள நிலையில், எதிர் வரும்  காலங்களில் அண்டை நாடுகளான தாய்லாந்து, பிலிப்பைன்ஸ், மியான்மார், வியட்நாம் உள்ளிட்ட நாடுகளுக்கும், விசாகப் பட்டினம், கொல்கத்தா உள்ளிட்ட நகரங்களுக்கும் சுற்றுலா பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்கிட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

இந்தியாவின் புகழை உலக அளவில் வெளிப்படுத்திட பிரதமர் நரேந்திர மோடி தொடர்ந்து பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். இதன் மூலம் சர்வதேச அளவில் மிகச்சிறந்த தலைவராக மோடி போற்றப்பட்டு  வருகிறார்.  இத்தகைய மாநாடுகள் மூலம் இந்தியாவின் புகழ் மென்மேலும் உயரும் என்றார் சர்பானந்த சோனோவால்.

சிறு துறைமுகங்களை மேம்படுத்த மத்திய அரசு உதவிட வேண்டும்: எ.வ.வேலு.

தொடக்க காலத்தில் இருந்தே தமிழர்கள் கடல் கடந்து வாணிபத்தில் ஈடுபட்டு வந்துள்ளார்கள். கடல் நீரோட்டத்தின் திசையை கொண்டு கப்பல்களை செலுத்தும் கலையை தமிழர்கள் அறிந்திருந்தனர்.

எனவே உலகிலேயே முதன் முதலில் கப்பல் போக்குவரத்தை தொடங்கி நடத்தியதில் தமிழர்களின் பங்கு மகத்தானது. இவ்வாறான கடல்சார் போக்குவரத்து மூலம் வணிகம் மட்டுமல்லாமல் தமிழர்களின் கலாசாரம், அரசியல் சோழர்களின் புகழ் உலகம் முழுவதும் பரவியது.

இதற்கான ஆதாரங்கள் கீழடி உள்ளிட்ட இடங்களில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சியில் கிடைத்துள்ளது. முதலீட்டை ஈர்த்து விரிவுபடுத்தும் இம்மாநாட்டிற்கு தமிழக அரசு தனது ஆதரவை அளிக்கும். தமிழகத்தில் உள்ள சிறு துறைமுகங்களை மேம்படுத்துவதற்கு மத்திய அரசு போதுமான நிதி உதவியை அளிக்க வேண்டும். வ உ சி துறை முகத்தை விரிவாக்கம் செய்யும் திட்டத்திற்கு உடனடியாக ஒப்புதல் அளித்து நிதி ஒதுக்கீடு அளிக்க வேண்டும். இதன் மூலம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு பெருகும் என்றார் அமைச்சர் வேலு.

நிகழ்ச்சியில் காமராஜர் துறைமுகத்தில் ரூ. 15 கோடி மதிப்பீட்டில் செலவில் பல்வேறு கட்டமைப்பு வசதிகளை உள்ளடக்கி அமைக்கப்பட்டுள்ள மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்களுக்கான சிறப்பு வளாகத்தை அமைச்சர் சோனாவால் திறந்து வைத்தார். அப்போது இதற்கான சாவியை மத்திய தொழில் பாதுகாப்பு படை ஐஜி சரவணனிடம் ஒப்படைத்தார்.

கப்பல் போக்குவரத்து அமைச்சக செயலாளர் டி.கே. ராமச்சந்திரன், சென்னை துறைமுகத்  தலைவர் சுனில் பலிவால்,  தமிழக அரசு துறை செயலாளர்கள் எஸ்.கிருஷ்ணன் பிரதீப் யாதவ், சென்னை துறைமுக துணை தலைவர் எஸ். விஸ்வநாதன், காமராஜர் துறைமுக மேலாண்மை இயக்குனர் ஐரின் சிந்தியா, தூத்துக்குடி வ.உ.சி துறைமுக துணை தலைவர் பிமல் குமார் ஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top