Close
செப்டம்பர் 20, 2024 1:23 காலை

பேரறிஞர் அண்ணா, தந்தை பெரியார் பிறந்தநாள்: பள்ளி கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டி

புதுக்கோட்டை

பெரியார் அண்ணா பிறந்தநாள் பேச்சுப் போட்டிகள்

பேரறிஞர் அண்ணா, தந்தை பெரியார் ஆகியோரின் பிறந்தநாளையொட்டிமாவட்ட அளவில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி நடைபெற உள்ளது.

இது குறித்து புதுக்கோட்டை மாவட்ட  ஆட்சியர் மெர்சி ரம்யா வெளியிட்ட தகவல்:

புதுக்கோட்டை
மெர்சி ரம்யா

தமிழ்நாடு அரசு, தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் 2021-22 -ஆம் ஆண்டிற்கான மானியக்கோரிக்கையில், நாட்டிற்காக பாடுபட்ட தலைவர்களான மகாத்மா காந்தியடிகள், ஜவஹர்லால் நேரு, அண்ணல் அம்பேத்கர், தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் ஆகியோரின் பிறந்தநாளன்று ஆண்டுதோறும் மாவட்ட அளவில் கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்களுக்கு பேச்சுப்போட்டி தனித்தனியே நடத்தி பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும் என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டது.

மானியக்கோரிக்கை அறிவிப்பிற்கிணங்க, செப்டம்பர்  15 ஆம் தேதி பேரறிஞர் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டும், 17 -ஆம்  தேதி  தந்தை பெரியார் பிறந்தநாளை முன்னிட்டும் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள அனைத்துக் கல்லூரி மற்றும் பள்ளி மாணவ மாணவியருக்கு தனித்தனியே பேச்சுப்போட்டி நடத்தப்பட்டு பரிசுத்தொகை மற்றும் பாராட்டுச்சான்றிதழ் வழங்கப்படும் என்று தமிழ் வளர்ச்சித் துறை அறிவித்துள்ளது.

மாவட்ட அளவில் நடத்தப்பெறும் இப்போட்டியில் பங்குப்பெற்று வெற்றி பெறும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியருக்கு தனித்தனியே முதல் பரிசாக ரூ.5,000/- இரண்டாம் பரிசாக ரூ.3,000/- மூன்றாம் பரிசாக ரூ.2,000/- என்ற வகைப்பாட்டில் வழங்கப்பட உள்ளது.

அத்துடன் பள்ளி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டியில் பங்கேற்கும் மாணவர்களுள் அரசு பள்ளி மாணவர்கள் இருவரை மட்டும் தெரிவு செய்து அவர்கள் ஒவ்வொரு வருக்கும் சிறப்பு பரிசுத்தொகையாக ரூ.2,000- வீதமும் வழங்கப்பட உள்ளது.

பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் பள்ளிப் பேச்சுப்போட்டிக் கான தலைப்புகள் “காஞ்சித்தலைவன்”, “அண்ணாவும் பெரியாரும்”, “தமிழும் அண்ணாவும்”, “எழுத்தாளராக அண்ணா”, “தென்னாட்டு பெர்னாட்ஷா”.

பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டிக்கான தலைப்புகள் “அண்ணாவும் மேடைப்பேச்சும்”, “கடமை, கண்ணியம், கட்டுப்பாடு”, “மக்கள் தொண்டே மகேசன் தொண்டு”, “வாய்மையே வெல்லும்”, “ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்”.

தந்தை பெரியார் பிறந்தநாள் பள்ளிப் பேச்சுப்போட்டிக்கான தலைப்புகள் “வெண்தாடி வேந்தர்”, ”வைக்கம் வீரர்”, ”பகுத்தறிவுப் பகலவன்”, ”பெரியாரின் சமூக சீர்திருத்தங்கள்”.

தந்தை பெரியார் பிறந்தநாள் கல்லூரிப் பேச்சுப் போட்டிக் கான தலைப்புகள் “பெரியாரும் பெண் விடுதலையும்”, “சுயமரியாதை இயக்கம்”, “தெற்காசியாவின் சாக்ரடீஸ்”, “தன்மானப் பேரொளி”, “தந்தை பெரியாரின் சமூகநீதிச் சிந்தனைகள்”.

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரியில் பயிலும் மாணவர்கள் (ஒவ்வொரு பள்ளி, கல்லூரியிலிருந்தும் ஒரு போட்டிக்கு ஒருவர் வீதம் இருவர் மட்டும்) இப்பேச்சுப் போட்டியில் பங்கேற்கலாம்.

போட்டி நடைபெறும் நாள், இடம், நேரம் விதிமுறைகள் ஆகியவை பள்ளிகளுக்கு முதன்மைக் கல்வி அலுவலர் வாயிலாகவும், கல்லூரிகளுக்கு தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர்/கல்லூரிக் கல்வி இணை இயக்குநர் வாயிலாகவும் தெரிவிக்கப்படும்.

போட்டியில் பங்கேற்க விழையும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் தொடர்புடைய பள்ளித் தலைமையாசிரியர், கல்லூரி முதல்வரிடம் உரிய படிவத்தில் பரிந்துரைக்கடிதம் பெற்று தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் அலுவலகத்திற்கு மின்னஞ்சலில் (pdkttamilthai@gmail.com) அனுப்பிட வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் செயற்பட்டு வரும் தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் அலுவலகத்தில் நேரிலோ, தொலைபேசி வாயிலாகவோ, கட்செவியிலோ (தொலைபேசி எண் 04322-228840) தொடர்பு கொள்ளலாம்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரியில் பயிலும் மாணவர்கள் இப்பேச்சுப்போட்டியில் பங்கேற்று பயன்பெறலாம்.மேற்கண்ட தகவலை மாவட்ட ஆட்சியர் ஐ.சா.மெர்சி ரம்யா தெரிவித்துள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top