Close
செப்டம்பர் 20, 2024 1:19 காலை

புதுக்கோட்டை நகராட்சியில் நீர்நிலை- அரசுப் புறம்போக்கு நில ஆக்கிரமிப்பு அகற்றும் பணி: ஆட்சியர் ஆய்வு

புதுக்கோட்டை

புதுகை நகராட்சிப்பகுதியில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணியை நேரில் ஆய்வு செய்த ஆட்சியர் கவிதாராமு

புதுக்கோட்டை நகராட்சியில் நீர்நிலைப் புறம்போக்கு மற்றும் அரசுப் புறம்போக்கு நிலங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள ஆக்கிரமணங்கள் அகற்றும் பணிகளை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு  (02.04.2022) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அதன்படி, புதுக்கோட்டை யானைமால்தெருவில் உள்ள சேர்வராயன்குளத்தில் ஜே.சி.பி. இயந்திரம் மூலம் ஆக்கிரமிப்பு அகற்றும் பணிகளையும், கோவில்பட்டியில் உள்ள சுப்பம்மாள் சமுத்திரம், சந்தைப்பேட்டை அருகில் உள்ள அக்கச்சியாகுளம், ராஜகோபாலபுரம் காக்காச்சி ஊரணி, பழையபேருந்துநிலையம் குமுந்தான்குளம் ஆகிய இடங்களை பார்வையிட்டார்.

அப்போது, ஆக்கிரமிப்பு செய்துள்ளவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பி ஆக்கிரமிப்புகள் அகற்றுவதற்கான பணிகளை மேற்கொள்ள சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

பின்னர்  ஆட்சியர்  தெரிவித்ததாவது: நீர்நிலை புறம்போக் குகளில் ஆக்கிரமணம் அகற்ற வேண்டும் என்ற  உச்ச நீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றங்களின் அறிவுரைப்படி, புதுக்கோட்டை மாவட்டத்தில் நீர்நிலை புறம்போக்கு மற்றும் அரசுப் புறம்போக்கு நிலங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள ஆக்கிரமணங்கள் அகற்றும் பணி போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மேலும், புதுக்கோட்டை மாவட்டத்தில் நீர்நிலைப் புறம்போக்கு நிலங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள ஆக்கிரமணங்கள் அனைத்தும் எவ்வித தயவு தாட்சயமின்றி அகற்றப்பட்டு வருகிறது. ஆக்கிரமிப்பு அகற்றும் பணியினை தடை செய்யும் நபர்கள் மீது சட்டபடியான கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

எனவே, புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள நீர்நிலைப் புறம்போக்கு நிலங்கள் உள்ளிட்ட அனைத்து வகையான அரசு புறம்போக்கு நிலங்களிலும் மேற்கொள்ளப்பட்டுள்ள ஆக்கிர மணங்களை தாமாக முன்வந்து அகற்றி கொள்ள வேண்டும். ஆக்கிரமணங்களை அகற்றிட தவறும் பட்சத்தில் அரசே தாமாக முன்வந்து ஆக்கிரமணங்களை அகற்றி, அதற்குரிய செலவினங்களை சம்மந்தப்பட்ட ஆக்கிரமணதாரர் களிடமிருந்து வசூலிக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு தெரிவித்தார்.
இந்நிகழ்வில் வருவாய் கோட்டாட்சியர் (பொ) கருணாகரன், நகராட்சி ஆணையர் நாகராஜன், வட்டாட்சியர் செந்தில்குமார், நகராட்சி பொறியாளர் சேகரன், நகரமைப்பு அலுவலர் ஜெய்சங்கர் மற்றும் அலுவலர்கள் பலர் உடனிருந்தனார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top