Close
செப்டம்பர் 20, 2024 1:44 காலை

புதுக்கோட்டை மாவட்ட தீயணைப்புத் துறைக்கு ரூ.5.57 இலட்சம் மதிப்பிலான தீயணைப்பு மற்றும் மீட்பு கருவிகள்: ஆட்சியர் கவிதா ராமு வழங்கல் 

புதுக்கோட்டை

போட்டிகளில் கேடயம் வென்ற தீயணைப்புதுறையினருக்கு வாழ்த்து தெரிவித்த ஆட்சியர் கவிதாராமு

புதுக்கோட்டை மாவட்ட தீயணைப்புத்துறைக்கு ரூ.5.57 இலட்சம் மதிப்பிலான தீயணைப்பு மற்றும் மீட்பு கருவிகளை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு  வழங்கினார்.

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரக வளாகத்தில், மாவட்ட ஆட்சியரின் தன்விருப்ப நிதி மற்றும் பேரிடர் மேலாண்மை நிதியிலிருந்து தீயணைப்பு மற்றும் பேரிடர் மீட்பு கருவிகளை, மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு  (22.07.2022) தீயணைப்பு மற்றும் மீட்புப் பணி துறையிடம் வழங்கினார்.

அதன்படி, வருகின்ற வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு ஏற்படும் பாதிப்புகளிலிருந்து பொதுமக்களை பாதுகாக்கும் வகையில் மாவட்ட நிருவாகத்தின் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.  இச்சூழ்நிலையில் தீயணைப்பு துறையின் மூலம் பயன்படுத்தப்படும் மேம்படுத்தப்பட்ட கருவிகளை கொண்டு பொதுமக்களை பேரிடர்களிலிருந்து மீட்கும் வகையில் மாவட்ட ஆட்சியர் அவர்களின் தன்விருப்ப நிதி மற்றும் பேரிடர் மேலாண்மை நிதியிலிருந்து 2 எண்ணிக்கையிலான விபத்து மற்றும் மீட்பு பணியின் பொழுது இரும்பு கம்பிகளை சுலபமாக வெட்டும் கருவி ரூ.2,24,200 மதிப்பீட்டிலும்,

மேலும் 2 எண்ணிக்கையிலான நீர் நிலைகள் மற்றும் கிணற்றுக்குள் மூழ்கி தவிப்பவர்களை தெரிந்து கொள்வதற்கான கேமரா, 2 எண்ணிக்கையிலான வெள்ளம் சூழ்ந்த இடங்களிலிருந்து நீரினை வெளியேற்றும் கருவி ஆகியவை ரூ.1,19,876 மதிப்பீட்டிலும், புகை சூழு்ந்த நிலையில் சிக்கிக் கொண்டவர்களை மீட்கும் கருவி ரூ.75,040 மதிப்பீட்டிலும், 5 எண்ணிக்கை யிலான கட்டட இடிபாடுகளுக்கிடையே சிக்கியவர்களை மீட்கும் வகையில் கான்கிரிட் தளங்கள் மற்றும் இரும்புகளை அகற்றும் கருவி ரூ.21,000 மதிப்பீட்டிலும், 11 எண்ணிக்கையிலான பாம்பு பிடிக்கும் கருவி, 11 எண்ணிக்கை யிலான முழு கவச உடை ரூ.1,16,435 என ஆகமொத்தம் ரூ.5,56,551 மதிப்பிலான 34 கருவிகள் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையிடம் ஒப்படைக்கப்பட்டது.

இக்கருவிகளை முழுமையாக பயன்படுத்தி பேரிடர் காலங்களில் பொதுமக்கள், கால்நடைகள் மற்றும் உடைமைகளை தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையினர் பாதுகாக்க வேண்டும் என்றார் மாவட்ட ஆட்சித் தலைவர்கவிதா ராமு. முன்னதாக பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற்ற தீயணைப்பு வீரர்களுக்கு பாராட்டு தெரிவித்தார் ஆட்சியர்.

இந்நிகழ்வில், மாவட்ட வருவாய் அலுவலர் மா.செல்வி, மாவட்ட தீயணைப்பு அலுவலர் பானுபிரியா, பேரிடர் மேலாண்மை வட்டாட்சியர் சூரியபிரபு மற்றும் அலுவலர்கள்  கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top