பிரிட்டனில் மீண்டும் தேர்தல் நடத்த வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. இதற்காக தொடங்கப்பட்ட கையெழுத்து இயக்கத்தை ஆதரித்து 6 மணிநேரத்தில் 2 லட்சம் பேர் கையெழுத்து போட்டு ஆளும் தொழிலாளர் கட்சியை வீட்டுக்கு அனுப்பும் சிக்கலான சூழ்நிலையை உருவாக்கியுள்ளது.
பிரிட்டனில் கடந்த ஜூலை மாதம்தான் தேர்தல் நடத்தப்பட்டு தேர்தலில் தொழிலாளர் கட்சி வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தது. பிரதமராக கெய்ர் ஸ்டார்மர் பொறுப்பேற்றுக் கொண்டார். பிரிட்டனில் அவரது ஆட்சி தொடங்கிய 4 மாதங்களிலேயே அவர் மீது அதிருப்தி ஏற்பட்டு அவருக்கு எதிரான அலை வீசத் தொடங்கியுள்ளது.
கட்சியின் கொள்கை மற்றும் ஆளும் கட்சியின் செயல்பாடுகளில் மக்களுக்கு சிறிதும் உடன்பாடில்லாமல் இருப்பதால் மக்கள் மத்தியில் கடும் அதிருப்தி ஏற்பட்டுள்ளது. இதனால் மறுதேர்தல் நடத்தக்கோரி, கையெழுத்து இயக்கம் நள்ளிரவில் தொடங்கப்பட்டது. ஆச்சர்யம் அளிக்கும்விதமாக இந்த கையெழுத்து இயக்கம் தொடங்கப்பட்ட 6 மணிநேரத்திலேயே 2 லட்சம் பேர் கையெத்திட்டு ஆட்சி மீதான அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர்.
பொதுவாக, ஒரு சட்டம் அல்லது கொள்கையின் மீது இது போன்ற கையெழுத்து இயக்கம் தொடங்கி 10 ஆயிரம் பேர் கையெழுத்து போட்டிருந்தால் கூட அதற்கு அரசு தரப்பில் இருந்து பதிலளிக்க வேண்டியது கட்டாயமாகும். அதேபோல ஒரு லட்சம் பேர் கையெழுத்து இட்டிருந்தால், பார்லிமென்ட்டில் விவாதமே நடத்த வேண்டும்.
இந்த இக்கட்டான சூழலில் அரசுக்கு எதிராக 2 லட்சம் பேர் கையெழுத்து போட்டிருப்பது, ஆளும் தொழிலாளர் கட்சிக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான செய்தியை தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்த டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க், ‘வாவ்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.