உலகில் 400 பில்லியன் டாலர் சொத்துக்களை குவித்த முதல் பணக்காரர் என்ற சாதனையை ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனர் எலான் மஸ்க் படைத்துள்ளார்.
ப்ளும்பெர்க் பில்லியனர்ஸ் இன்டக்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் எலான் மஸ்க்கின் சொத்து விகிதம் அதிகரிப்பதற்கு ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் பங்குகள் முக்கிய இடம்பிடித்துள்ளது. அதன் மதிப்பு சுமார் 350 பில்லியன் அமெரிக்க டாலராகும். உலகின் மதிப்பு மிக்க நிறுவனமாக ஸ்பேஸ் எக்ஸ் திகழ்ந்து வருகிறது.
ஸ்பேஸ் எக்ஸ் பங்குகள் விற்பனை மற்றும் டெஸ்லா நிறுவனத்தின் பங்குகளின் விலை உயர்ந்ததால் எலான் மஸ்க்கின் சொத்து மதிப்பு 447 பில்லியன் அமெரிக்க டாலராக உயர்ந்துள்ளது. மேலும் எக்ஸ் ஏ.ஐ, எனும் நிறுவனத்தையும் மஸ்க் நடத்தி வருகிறார்.
எலக்ட்ரிக் வாகனங்கள், தூய்மையான எரிசக்தி ஆகியவற்றின் மீது முதலீட்டாளர்களுக்கு ஏற்பட்டுள்ள நம்பிக்கையால் இதுவரை இல்லாத அளவில் டெஸ்லாவின் பங்கு 415 டாலராக அதிகரித்துள்ளது.
அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்ப் வெற்றி பெற்ற பிறகு, அவரது ஆதரவாளரான எலான் மஸ்க் நிறுவனத்தின் பங்குகள் தாறுமாறாக அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது. டிசம்பர் 10ம் தேதி நிலவரப்படி, அமேசான் தலைவர் ஜெப் பெஜோஸைக் காட்டிலும் எலான் மஸ்க் 140 பில்லியன் அமெரிக்க டாலர் சொத்துக்கள் அதிகம் பெற்றுள்ளார்.