புற்றுநோய் தடுப்பூசியை உருவாக்கி இருக்கிறோம். 2025ம் ஆண்டின் தொடக்கத்தில் புற்று நோயாளிகளுக்கு இலவசமாக தடுப்பூசி கிடைக்கும் என்று ரஷ்ய சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது.
புற்று நோய்களுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கும் ஆராய்ச்சியில் உலகின் பல நாடுகளும் ஈடுபட்டுள்ளன. சில தனியார் மருந்து நிறுவனங்கள், ‘மெலனோமா’ எனப்படும் உயிர் பறிக்கும் தோல் புற்றுக்கான தடுப்பூசி கண்டுபிடிக்கும் ஆராய்ச்சியில் பாதி கட்டத்தை தாண்டியுள்ளன. புற்றுநோய் தடுப்பூசி கண்டுபிடிக்கும் பணியில் ரஷ்ய ஆராய்ச்சியாளர்களும் தீவிரமாக ஈடுபட்டிருந்தனர்.
சமீபத்தில், ‘ரஷ்ய விஞ்ஞானிகள் புற்று நோய்க்கு எதிரான தடுப்பூசியை உருவாக்கும் முயற்சியில் இறுதிக் கட்டத்தில் இருக்கிறோம். விரைவில் நோயாளிகளின் பயன்பாட்டுக்கு கிடைக்கும்,” என்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் உறுதிப்படுத்தி இருந்தார்.
இந்நிலையில், இன்று (18ம் தேதி ) புற்றுநோய் தடுப்பூசியை உருவாக்கி இருக்கிறோம்.2025ம் ஆண்டின் தொடக்கத்தில் நோயாளிகளுக்கு இலவசமாக கிடைக்கும் என்று ரஷ்ய சுகாதார அமைச்சகம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
குறிப்பாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க மருந்துகள் பயன்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து ரஷ்ய சுகாதார அமைச்சகத்தின் கதிரியக்க மருத்துவ ஆராய்ச்சி மைய பொது இயக்குநர் ஆண்ட்ரே கப்ரின் கூறும்போது,
‘புற்றுநோய்க்கு எதிராக சொந்தமாக என்.ஆர்.என்.ஏ., தடுப்பூசியை உருவாக்கி இருக்கிறோம். இந்த புற்றுநோய் தடுப்பூசி மக்களுக்கு இலவசமாக வழங்கப்படும்’ என்று கூறியுள்ளார்.
ஒவ்வொரு ஆண்டும் உலகம் முழுவதும் புற்றுநோயால் உயிரிழப்போரின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. தற்போது புற்றுநோய்க்கு தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால் புற்றுநோயால் உயிரிழப்போரின் எண்ணிக்கை கணிசமாக குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.