உலகில் இரண்டு விதமான தத்துவங்கள் முதன்மையானவை. ஒன்று கருத்துமுதல்வாதம். இரண்டாவது பொருள்முதல்வாதம். ஹெகல், லுட்விக் ஆகிய இயக்கவியல்வாதிகளின்கருத்துமுதல்வாத, பொருள்முதல்வாத ஆய்வுகளை தீவிரமாக ஆய்வு செய்து கருத்து, பொருள்முதல்வாதங்கள் வர்க்க உறவுகளின் மனிதர்களுக்கிடையேயான உறவுகள் சம்பந்தப்பட்டது என்பதை கண்டறிந்தவர் மாமேதை மார்க்ஸ்.
மூளைத்திறனை அதிகம் பயன்படுத்திய அந்த ஆளுமை இன்று இல்லை என்று முதலாளி வர்க்கம் நம்பவில்லையென்பதும், அவர்களுக்கான அச்சுறுத்துதலாக அமையும் புரட்சிக்கர வரிகளின் அவசிய தேவை இன்னும் தீரவில்லையென்பதும் நிதர்சனம்..
கார்ல் மார்க்ஸ் காலத்தில் உழைப்பாளர்களின் ரத்தத்தை உறிஞ்சி உபரி மதிப்பை பெற வேண்டியிருந்தது. ஆனால் இன்று உறிஞ்சப்படுவதையே உணர முடியாத அளவுக்கு சுரண்டல் முறையில் விஞ்ஞான தொழில் நுட்பம், முதலாளித்துவத்திற்கு ஆயத்தமாகி விட்டது. இதனால் சுரண்டும் முதலாளிகளை, உழைக்கும் மக்கள் நேரில் பார்ப்பது அரிது. எனவே எதிர்ப்பு உணர்வு தோன்றுவதும் அரிதாகி விட்டது. இதை புதுப்பிக்க அறிவியல் ரீதியாக சமத்துவத்தை கொண்டுவர ஆய்வு செய்த அந்த ஆளுமை இன்றும் நமக்கு தேவைப்படுகிறார்.
19-ஆம் நூற்றாண்டில் மூன்று முக்கியமான தத்துவப் போக்குகள் ஐரோப்பாவை ஆட்டிப்படைத்தது. அவை ஐரோப்பியக் கண்டத்தில் இருந்த மூன்று நாடுகளைச் சேர்ந்தவையாகும். அவை, மூலச்சிறப்புள்ள ஜெர்மன் தத்துவ ஞானம், மூலச்சிறப்புள்ள ஆங்கிலேய அரசியல் பொருளாதாரம், பிரெஞ்சுப் புரட்சிப் போதனைகளுடன் இணைந்த பிரெஞ்சு சோஷலிசம் என்பதாகும்.
இந்த மூன்று தத்துவப் போக்குகளையும் தொடர்ந்து ஆராய்ந்து, அவற்றிற்கு முழு நிறைவு அளித்தவர் தான் மாமேதை கார்ல் மார்க்ஸ். இந்தக் கருத்துகள் முழுவதுமாகச் சேர்ந்துதான் நவீன காலத்திய பொருள் முதல்வாதமாகவும் நவீன காலத்திய விஞ்ஞான சோஷலிசமாகவும் அமைந்துள்ளன. இவ்விரண்டும் உலகிலுள்ள நாகரீக நாடுகளிலெல்லாம் தொழிலாளர் இயக்கத்தின் தத்துவமாகவும், வேலை திட்டமாகவும் திகழ்கின்றன.
மார்க்சின் தத்துவம், மனிதர் அனைவரும் சமமாக இயற்கையின் வளத்தை பங்கிட்டுக் கொண்டு வளமும் நலமும் பெற்று வாழ்வதற்கான உயரிய தத்துவமாகும். மக்கள் வறுமை நீங்கி இப்பூவுலகில் வாழ்வதற் கான வழி வகைகளைச் சிந்தித்த பொருளாதார முறைமை தான் மார்க்ச்சியம். தொழிலாளர்கள் தமக்கான அரசியல் அதிகாரத்தை வென்றெடுக்க துணைபுரியும் மாபெரும் தத்துவம் அது. மனித குலத்தில் வறுமை என்ற ஒன்று இருக்கும் வரை மார்க்சிய தத்துவமும் இருக்கும். “மார்க்சின் தத்துவம் முதலாளித்துவ, தனிச்சொத்துடமைக்கும் , சுரண்டலுக்கும் எதிரானதாக இருந்தது. எனவே அது உழைக்கும் மக்களுடைய தத்துவமாயிற்று.
லண்டன் ஹைகேட் நினைவிடத்தில் கம்யூனிஸ்ட் அறிக்கையின் புகழ்பெற்ற ‘உலகத் தொழிலாளர்களே ஒன்றுபடுங்கள்’ என்கிற வாசகம் பொறிக்கப்பட்டுள்ளது, அதற்குக் கீழே மார்க்ஸ் சொன்ன இன்னொரு வாசகமும்.., “தத்துவவாதிகள் பல்வேறு விதங்களில் இந்த உலகத்தைப் பற்றிய விளக்கத்தை மட்டுமே சொல்லியிருக்கிறார்கள்; என்றாலும், அதை மாற்றுவதுதான் முக்கியமான விஷயம்.” உலகத் தொழிலாளர்களே ஒன்றுபடுங்கள் உங்களிடம் இழப்பதற்கு ஒன்றும் இல்லை!. பெறுவதற்கு ஒரு புதிய பொன்னுலகம் காத்துக் கொண்டிருக்கிறது!!! என்ற கார்ல் மார்க்சின் குரல் என்றைக்கும் இவ்வுலகை விட்டு ஓய்ந்து போகாது!!
#இங்கிலாந்திலிருந்துசங்கர்🎋#