Close
செப்டம்பர் 20, 2024 3:58 காலை

சென்னிமலை அருகே ஆழ்குழாய் கிணற்றில் இருந்து கருப்பு நிறத்தில் வெளியேறிய தண்ணீர்… பொதுமக்கள் அதிர்ச்சி..

ஈரோடு

சென்னிமலை அருகே ஆழ்குழாய் கிணற்றில் இருந்து கருப்பு நிறத்தில் வெளியேறிய சாய கழிவுநீர்

ஈரோடு மாவட்டம், சென்னிமலை அருகே ஆழ்துளை  கிணற்றில் இருந்து  கருப்பு நிறத்தில் தண்ணீர் வெளிவந்ததால் பொதுமக்கள், விவசாயிகள்  அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

சென்னிமலை அருகே முருங்கத்தொழுவு ஊராட்சிக்கு உட்பட்ட மைலாடி வெள்ளியங்காடு பகுதியில் வசிப்பவர் சீனிவாசன். விவசாயியான இவர் தனது தோட்டத்தில் ஆழ்குழாய் கிணறு அமைத்து அதில் இருந்து தண்ணீர் எடுத்து விவசாயம் செய்து வருகிறார். மேலும், வீட்டு உபயோகத்திற்கும் இந்த தண்ணீரை பயன்படுத்தி வருகிறார்.

சமீபத்தில் அந்தப் பகுதியில் மழை பெய்ததால் இவர் ஆழ்துளை கிணற்று நீரை பயன்படுத்தவில்லையாம். இந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை ஆழ்குழாய் கிணற்று மோட்டாரை இயக்கி தண்ணீர் எடுத்துள்ளார். அப்போது துர்நாற்றத்துடன் தண்ணீர் வந்துள்ளது. தொடர்ந்து ஒரு மணி நேரம் மோட்டாரை இயக்கியும் தொடர்ந்து தண்ணீர் கருப்பு நிறமாகவே இருந்துள்ளது.

 விவசாயி சீனிவாசன் மற்றும் அந்த பகுதியில் இருந்தவர்கள் கருப்பு நிறத்தில் வந்த தண்ணீரை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். மேலும் சென்னிமலை ஊராட்சி ஒன்றியக்குழு துணை தலைவர் பன்னீர்செல்வம் மற்றும் அந்த பகுதி வார்டு உறுப்பினர்கள் ஆழ்குழாய் கிணற்றிலிருந்து வெளியேறிய தண்ணீரை  பாட்டிலில் சேகரித்து  பெருந்துறை மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர்.

அந்த பகுதியில் உள்ள ஏதாவது சாய தொழிற்சாலையில் இருந்து சுத்திகரிப்பு செய்யாமல் சாய கழிவுகளை வெளியேற்றியதால் அந்த சாய கழிவுகள் ஆழ்குழாய் கிணற்றில் கலந்து இருக்கலாம் என அப்பகுதி மக்கள் சந்தேகம் தெரிவித்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top