Close
ஜூன் 6, 2026 11:49 மணி

நாமக்கல் மாரியம்மன் கோயில் வசூலில் முறைகேடு: அமைச்சர் நடவடிக்கை எடுக்க பக்தர்கள் கோரிக்கை

நாமக்கல் பலபட்டறை மாரியம்மன் கோயிலில் நடைபெற்று வரும் முறைகேடுகள் குறித்து, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் விசாரணை நடத்த வேண்டும் என பக்தர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இது குறித்து, நாமக்கல் மாரியம்மன் பக்த சபா தலைவர் ஆட்டோராஜா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: நாமக்கல் மாநகரில் பிரசித்திபெற்ற பலப்பட்டறை மாரியம்மன் திருக்கோயில் உள்ளது. இந்த கோயிலில் ஆண்டுதோறும் மே மாதம் தேர்த்திருவிழா சிறப்பாக நடைபெறும்.

இந்த ஆண்டு கடந்த மே 10ம் தேதி மாரியம்மன் தேர்த்திருவிழா காப்பு கட்டுதலுடன் துவங்கியது. நாள்தோறும் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் சுவாமி வீதி உலா நடைபெற்று வந்தது. கடந்த வாரம் 5 நாட்கள் தேர்த்திருவிழா சிறப்பாக நடைபெற்று மஞ்சள் நீர் உற்சவத்துடன் விழா நிறைவு பெற்றது. வருகிற ஆக. 3ம் தேதி வரை தினசரி கட்டளைதாரர்கள் மூலம் காலை சுவாமி அபிசேகம் நடைபெறும். மாலையில் சுவாமி அலங்காரம் நடைபெற்று வீதி உலா நடைபெறும்.

நாமக்கல் மாநகரின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்களும் கோயிலில் தினசரி கட்டளைக்காக ரூ. 6 ஆயிரம் கட்டணம் செலுத்தி பூஜைகள் செய்வார்கள். இரவு அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் சுவாமியை தங்கள் பகுதிக்கு எடுத்துச்சென்று வீதி உலா செய்வார்கள்.

கட்டளைதாரர்கள் செலுத்தும் கட்டணத்திற்கு கோயில் சார்பில் ரசீது வழங்கப்படுவதில்லை. மேலும் கோயிலில் செயல் அலுவலர் மற்றும் அறங்காவலர் குழுவினர் இருந்தும், பணத்தை தனிப்பட்ட 2 பேர் வசூல் செய்து வருகின்றனர். இதற்கு கணக்கு கொடுப்பதில்லை.

கோயிலில் மொட்டை அடிப்பவர்களிடம் ரூ. 100 வசூல் செய்து முடிதிருத்தும் தொழிலாளிக்கு 75 போக மீதம் ரூ. 25ஐ தனிப்பட்ட 2 பேர் வைத்துக்கொள்கின்றனர். இந்த நிலையில் சுவாமி அலங்காரம் செய்யும் இடத்தில் உள்ள ஃபோகஸ் லைட்டுகளை சமீபத்தில் அகற்றியுள்ளனர். இதனால் சுவாமி அலங்காரம் செய்பவர்கள் மெயின் ரோடு ஓரம் ரதத்தை நிறுத்தி தெருவிளக்கு வெளிச்சத்தில் அலங்காரம் செய்ய வேண்டிய நிலை உள்ளது.

இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயிலில், செயல் அலுவலருக்கு தெரியாமல், கோயிலுக்கு சம்மந்தம் இல்லாத 2 பேர் பக்தர்களிடம் இருந்து, ரசீது இல்லாமல் பணம் வசூல் செய்து, கோயிலுக்கு வரவேண்டிய வருவாயை தாங்கள் எடுத்துக்கொள்கின்றனர்.

எனவே, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் இது குறித்து நேரடி நடவடிக்கை எடுத்து, வேறு அதிகாரிகள் மூலம் நாமக்கல் மாரியம்மன் கோயிலில் கடந்த 5 ஆண்டுகளாக நடைபெற்று வந்த நன்கொடை வசூல் பணம் மற்றம் விழா கட்டளை கடட்டணம் உள்ளிட்ட பல்வேறு வசூலில் நடைபெற்ற முறைகேடுகளை கண்டுபிடித்து, சம்மந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top