தென் மாவட்டங்களில் இருந்து இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்கும் செல்லக்கூடிய ரயில்களும் மதுரை அடுத்து சோழவந்தான் ரயில் நிலையத்தை கடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. தினசரி 50க்கும் மேற்பட்ட ரயில்கள் சோழவந்தான் நிலையத்தை கடந்து செல்லக்கூடிய நிலையில் பாண்டியன், வந்தே பாரத், அந்தியோத்யா உள்ளிட்ட பல்வேறு ரயில்கள் சோழவந்தான் ரயில் நிலையத்தில் நிற்காமல் செல்கிறது
இது குறித்து பொதுமக்கள் மற்றும் திமுக உள்ளிட்ட கட்சிகள் பலமுறை ரயில்வே நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்தும் தற்போது வரை நடவடிக்கை எடுக்கவில்லை. இந்த நிலையில் ரயில் நிலையத்தில் உள்ள பெயர் பலகையில் உள்ள இந்தி எழுத்துக்களை மர்ம நபர்கள் சிலர் அழித்துள்ளனர். அதன் அருகிலேயே ரயில் நிலைய சுவற்றில் பாண்டியன் அந்தியோதயா ரயில் உள்ளிட்டவைகள் சோழவந்தான் ரயில் நிலையத்தில் நின்று செல்ல வேண்டும் என்று கருப்பு எழுத்துகளால் எழுதப்பட்டுள்ளது
ஏற்கனவே சில மாதங்களுக்கு முன்பு இதேபோன்று மர்ம நபர்கள் ரயில் நிலைய பெயர் பலகையில் உள்ள இந்தி எழுத்துக்களை அழித்திருந்தது குறிப்பிடத்தக்கது. மீண்டும் மீண்டும் இது போன்ற சம்பவங்கள் நடைபெறுவதால் ரயில் பயணிகள் பொதுமக்கள் ஒருவித அச்சத்துடன் உள்ளனர்
இது குறித்து காவல்துறையினர் மற்றும் ரயில்வே போலீசார் உரிய விசாரணை செய்து ரயில் நிலைய பெயர் பலகை மற்றும் சுவற்றில் இதுபோன்ற வாசகங்களை எழுதுபவர்களை கண்டுபிடித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். ரயில் நிலைய கண்காணிப்பு கேமராவில் பதிவு செய்யப்பட்டுள்ள காட்சிகளை அடிப்படையில் விசாரணை நடத்தி சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளனர்



