நாமக்கல்லில் செல்போன் திருடியதாக கூறி, தொழிலாளியை சரமாரியாக தாக்கியதில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பாக, லாரி பட்டறை உரிமையாளர் உள்பட, 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
நாமக்கல் மாவட்டம், எருமப்பட்டி பழனி நகரை சேர்ந்தவர் பத்மநாபன் (47). இவர், நாமக்கல் – சேலம் ரோட்டில் ரவுண்டானா அருகில், லாரிகளுக்கான மெக்கானிக்கல் பட்டறை நடத்தி வருகிறார். இவரது பட்டறையில், வேப்பணம்புதூரை சேர்ந்த சக்திவேல் (42), நல்லிபாளையம் மேற்கு வீதியை சேர்ந்த ரகுவரன் (31) ஆகியோர் பணியாற்றுகின்றனர்.
விடுமுறைநாளான நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை 4:00 மணிக்கு, பத்மநாபன், சக்திவேல், ரகுவரன், அவரது நண்பர் நவீன்குமார் (33) ஆகியோர் ஒன்றாக சேர்ந்து மது அருந்தியுள்ளனர். அப்போது, ரகுவரனின் மொபைல் போனை, சக்திவேல் எடுத்துக் கொண்டாக கூறி கேட்டுள்ளனர். நான் எடுக்கவில்லை என மறுத்துள்ளார். அதனால், அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பில் முடிந்தது.
ஆத்திரம் அடைந்த பத்மநாபன், ரகுவரன், நவீன் மூவரும் சேர்ந்து, சக்திவேலை மோட்டார் பெல்ட்டால் சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது. அதில், சக்திவேல் மயங்கி விழுந்துள்ளார். அப்படியே விட்டுவிட்டு மூவரும் அவரவர்கள் வீட்டுக்கு சென்றுவிட்டனர். இன்று காலை 7:00 மணிக்கு பட்டறைக்கு சென்று பார்த்தபோது, சக்திவேல் இறந்து கிடப்பது தெரிந்து அதிர்ச்சி அடைந்தனர்.
தகவல் அறிந்த நல்லிபாளையம் காவல்துறையினர் சடலத்தை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து கொலை வழக்குப் பதிவு செய்து, லாரி பட்டறை உரிமையாளர் பத்பநாபன் மற்றும் ரகுவரன், நவீன் ஆகிய 3 பேரையும் கைது செய்து தீவிர விசாரணை நடத்துகின்றனர்.




