Close
செப்டம்பர் 7, 2026 3:33 மணி

கிராம சபைகளை வலுப்படுத்த முதல்வர் விஜய்க்கு கமல் கடிதம்

காந்தி ஜெயந்தி கிராம சபைக் கூட்டங்களை முன்னிட்டு, கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளை மேலும் பலப்படுத்தவும், மக்களின் நேரடிப் பங்கேற்பை உறுதி செய்யவும் வலியுறுத்தி ம.நீ.ம தலைவர் கமல்ஹாசன், தமிழக முதல்வர் விஜய்க்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்

இது குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள கமல் ஹாசன், “காந்தியடிகளின் ‘கிராம சுயராஜ்யம்’ என்ற கனவு, அதிகாரம் பெற்ற கிராமங்கள் மற்றும் மக்களாட்சியின் நேரடிப் பங்கேற்பை அடிப்படையாகக் கொண்டது. அந்த லட்சியத்தைக் கௌரவிக்கும் வகையில், கிராம பஞ்சாயத்து நிர்வாகத்தில் தமிழகத்தை நாட்டின் முன்னோடி மாநிலமாக மாற்றுவதே சிறந்த வழியாகும்.

அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 243ஏ-ன் கீழ் அங்கீகரிக்கப்பட்ட கிராம சபை என்பது மக்களாட்சியின் நேரடி வடிவம் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கமல் ஹாசன் முன்வைத்துள்ள முக்கிய பரிந்துரைகள்:

  • கிராமப்புற மக்கள் சேவையை அங்கீகரிக்கும் வகையில், கிராம பஞ்சாயத்து தலைவர்களுக்கு மாதப் படியாக ரூ.16,000, துணைத் தலைவர்களுக்கு ரூ.10,000 மற்றும் வார்டு உறுப்பினர்களுக்கு ரூ.8,000 ஆக உயர்த்த வேண்டும்.
  • கிராமங்களில் செயல்படும் டாஸ்மாக் மதுக்கடைகளுக்கு எதிராகக் கிராம சபை தீர்மானம் நிறைவேற்றினால், அந்த மதுக்கடையை மூடுவதற்கான அதிகாரப்பூர்வ நடைமுறையை அரசு உருவாக்க வேண்டும். புதிய மதுக்கடைகள் திறக்க கிராம சபையின் ஒப்புதல் கட்டாயமாக்கப்பட வேண்டும்.
  • கிராம சபைக் கூட்டங்களில் பொதுமக்கள் அதிகம் பங்கேற்கத் தொடர் விழிப்புணர்வுப் பிரசாரங்களை நடத்த வேண்டும். சிறந்த முறையில் நடைபெறும் கிராம சபைக் கூட்டங்களை மாநிலம் முழுவதும் நேரலை ஒளிபரப்பு செய்து மற்ற கிராமங்களுக்கு முன்மாதிரியாகக் காட்டலாம்.
  • கிராம சபைகளில் நிறைவேற்றப்படும் தீர்மானங்கள் மீது குறிப்பிட்ட காலவரையறைக்குள் நடவடிக்கை எடுக்கப்பட்டு, அதன் நிலை அறிக்கையைப் பொதுவெளியில் வெளியிட வேண்டும்.
  • கிராம சபை கூட்டத்தில் எதைப் பற்றி விவாதிக்க வேண்டும் என்பதை மக்களே முன்மொழியும் வசதி உருவாக்கப்பட வேண்டும். அரசின் திட்டங்களை மட்டும் அறிவிக்கும் கூட்டமாக அது சுருங்கிவிடக் கூடாது.
  • மாநில ஊரக வளர்ச்சி நிறுவனத்தை வலுப்படுத்துவதுடன், உள்ளாட்சிப் பிரதிநிதிகளுக்கான பயிற்சிகளில் அதிக முதலீடு செய்ய வேண்டும்.
  • குடிநீர், சுகாதாரம், சாலைகள், கல்வி மற்றும் சுற்றுச்சூழல் தொடர்பான தேவைகளைக் கிராம மக்களே முன்னுரிமைப்படுத்தித் திட்டமிடும் தளமாக கிராம சபை மாற வேண்டும்.
  • உள்ளாட்சி நிர்வாகத்தைக் கேள்வி கேட்கவும், பொறுப்பேற்கச் செய்யவும் குடிமக்களுக்கு முழு அதிகாரம் அளிக்கும் தளமாக கிராம சபைகள் பரிணமிக்க வேண்டும்.

அக் 2 கிராம சபைக் கூட்டங்கள், உள்ளாட்சி ஜனநாயகத்தை மேலும் சுயாட்சி மற்றும் வெளிப்படைத்தன்மை கொண்டதாக மாற்றுவதற்கு ஒரு சிறந்த வாய்ப்பு என்றும் கமல் ஹாசன் தனது கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top