Close
செப்டம்பர் 7, 2026 3:33 மணி

ஆம்னி பேருந்துகளுக்கு பர்மிட் தடையை நீக்கக் கோரி முதல்வர் விஜய்க்கு அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் கடிதம்!

தமிழ்நாட்டில் ஆம்னி பேருந்துகளுக்கான புதிய பர்மிட்கள் வழங்குவது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால், பயணிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாவதாகவும், அரசுக்கு வரி வருவாய் இழப்பு ஏற்படுவதாகவும் சுட்டிக்காட்டி, அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தமிழக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்க்கு அவசரக் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.

அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் டாக்டர் ஏ. அன்பழகன் தலைமையில் அனுப்பப்பட்டுள்ள இந்தக் கடிதத்தில், சுமார் 300 பர்மிட் விண்ணப்பங்கள் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக வழங்கப்படாமல் நிலுவையில் உள்ளன. மேலும், ஏற்கனவே வழங்கப்பட்ட 270 பர்மிட்களின் அடிப்படையில் காலாண்டுக்கு ரூ. 1.50 லட்சம் வரை சாலை வரி செலுத்தியும், போக்குவரத்து ஆணையரின் இறுதி ஒப்புதல் கிடைக்காததால் 270-க்கும் மேற்பட்ட பேருந்துகளை இயக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அந்த கடிதத்தில், தமிழகம் முழுவதும் தினசரி 6,000-க்கும் மேற்பட்ட ஆம்னி பேருந்துகள் மூலம் 2.50 லட்சத்திற்கும் அதிகமான பயணிகள் பயன்பெறுகின்றனர். இத்துறை மூலம் அரசிற்கு ஆண்டுதோறும் சுமார் ரூ. 900 கோடி நேரடி வருவாயும், ரூ. 3,000 கோடி மறைமுக வருவாயும் கிடைக்கிறது. பர்மிட் தாமதத்தால் உரிமையாளர்களுக்கு பெரும் பொருளாதார இழப்பும், பயணிகளுக்குப் போக்குவரத்து பற்றாக்குறையும் உருவாகியுள்ளது

தற்போது கோயம்பேட்டில் ஆம்னி பேருந்துகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ள இடத்தில் 150 பேருந்துகளை மட்டுமே நிறுத்த முடியும் என்பதால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே, முழுமையாகப் பயன்படுத்தப்படாமல் உள்ள கோயம்பேடு பேருந்து நிலையத்தை ஆம்னி பேருந்துகளின் பயன்பாட்டிற்கு தற்காலிகமாகவோ அல்லது நிரந்தரமாகவோ வழங்க வேண்டும் என கடிதத்தில் கோரப்பட்டுள்ளது.

இது கிளாம்பாக்கத்திற்கு மாற்றான திட்டம் அல்ல என்றும், வட, மத்திய மற்றும் மேற்கு சென்னை பயணிகள் கோயம்பேட்டிலும், தென் சென்னை பயணிகள் கிளாம்பாக்கத்திலும் பேருந்தில் ஏறும் வகையில் “கோயம்பேடு + கிளாம்பாக்கம்” மல்டி-ஹப் முறையை நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் பயணிகள் கூடுதல் நேரம் பயணித்து கிளாம்பாக்கம் செல்லும் சிரமம் குறையும்.

தமிழகத்தில் உள்ள 22 எல்லை சுங்கச் சாவடிகளிலும் ஒரு வாகனத்திற்கு ரூ. 500 முதல் ரூ. 3000 வரை கையூட்டு பெறப்படுவதாகவும், இந்த விவகாரங்களில் முதல்வர் தலையிட்டு உடனடியாகத் தீர்வு காண வேண்டும் என்றும் உரிமையாளர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top