Close
செப்டம்பர் 20, 2024 5:51 காலை

புற்றுநோயை தடுத்து குணப்படுத்த முடியும் என்பது சாத்தியமாகியுள்ளது

புதுக்கோட்டை

கருந்தரங்கில் பேசுகிறார், சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துமனை, புற்றுநோய் நோய்த்தடுப்புத்துறைத் தலைவர் மருத்துவர் ஜெ.எஸ்.மல்லிகா

புற்றுநோய் குணப்படுத்தக்கூடியது. அதேபோல தடுக்கவும் முடியும். புற்றுநோய் மரபு சார்ந்ததல்ல.புற்றுநோய் தொற்றுநோயுமல்ல என்றார் சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துமனை, புற்றுநோய் நோய்த்தடுப்புத் துறைத் தலைவர் மருத்துவர் ஜெ.எஸ்.மல்லிகா.

புதுக்கோட்டை கலைஞர் கருணாநிதி அரசு மகளிர் கலைக்கல்லூரி (தன்னாட்சி), அடையாறு புற்றுநோய் மருத்துவமனை (சென்னை), புதுக்கோட்டை புற்றுநோய் ஆராய்ச்சி மற்றும் பரிசோதனை மையம் இணைந்து நடத்திய புற்றுநோய் விழிப்புணர்வு கருத்தரங்கம்,  கல்லூரி அரங்கில்  (16.2.2023) நடைபெற்றது.

கருத்தரங்கிற்கு கல்லூரி முதல்வர் முனைவர் பா. புவனேஸ்வரி  தலைமை வகித்தார். வாசகர் பேரவை செயலர் சா.விஸ்வநாதன் அறிமுகவுரையாற்றினார் கருந்தரங்கில், சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துமனை, புற்றுநோய் நோய்த் தடுப்புத்துறைத் தலைவர் மருத்துவர் ஜெ.எஸ்.மல்லிகா  சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று மேலும்  பேசியதாவது:

குணப்படுத்த முடியாதது புற்றுநோய் என்று கருதப்பட்ட காலத்தில் குணப்படுத்த முடியும் என்ற நம்பிக்கையில், மன உறுதியுடன் போராடி சென்னை அடையாறு புற்று மருத்துவமனையை தொடங்கினார் புதுக்கோட்டை மண்ணில் பிறந்த  நாட்டின் முதல் பெண் மருத்துவர் என்ற பெருமைக்குரிய  டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி.

அது இன்று வளர்ந்து பல ஆயிரக்கணக்கான மக்களின் நம்பிக்கைக்கு பாத்திரமாக  நிலைத்து  நிற்கிறது. புற்றுநோய் குணப்படுத்தக்கூடியது. அதேபோல தடுக்கவும் முடியும். புற்றுநோய் மரபுசார்ந்ததல்ல.புற்றுநோய் தொற்று நோயுமல்ல. அது வருவதற்கு பல காரணங்கள் உண்டு.

அதில் ஒன்று அதிகமான புகையிலை பயன்பாடு. முதலில் புகையிலைப் பயன்பாட்டை குறைக்க வேண்டும். முடிந்தால் தடை கூட செய்ய வேண்டும். அதன்மூலம் புற்றுநோய் வராமல் தடுக்கலாம்.

இன்று பெண்களை அதிமாகத் தாக்குவது மார்பகப்புற்று நோயும், கர்ப்ப வாய்ப் புற்றுநோயுமாகும். குறிப்பாக மார்பகப்புற்றுநோய்க்கு முக்கிய காரணங்களில் ஒன்று தாய்ப்பால் கொடுப்பது (Breast feeding) குறைத்திருப்பது.

அதேபோல மன அழுத்தமும் ஒன்று. முதல்நிலையிலேயே அதைக்கண்டறிந்தால் குணப்படுத்த முடியும். இதனை கருத்தில் கொண்டு தான் பல்வேறு இடங்களில் அடையாறு புற்றுநோய் மருத்துவமனை பரிசோதனை மையங்களைத் தொடங்கியுள்ளது.

புதுக்கோட்டை பழைய மருத்துவமனை வளாகத்திலும் அந்த பரிசோதனை மையம் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இங்கே உங்களுக்கு சொல்லப்பட்ட தகவல்களை மற்றவர்க ளுக்கும் கொண்டு செல்ல வேண்டியது உங்களின் கடமை. அதன்மூலம் பல பேரின் உயிரைக் காப்பாற்ற முடியும் என்பதை கல்லூரி மாணவிகள் நினைவில் கொள்ள வேண்டும் என்றார்.
நிகழ்வில் அடையாறு புற்றுநோய் மருத்துவமனை மருத்துவர் பிரீனா மற்றும் பேராசிரியர்கள் ஏராள மாணவிகள் கலந்துகொண்டனர். கருத்தரங்கை நாட்டுநலப்பணிதிட்ட அலுவலர்கள் வசந்தகுமாரி, தவமணி, தனலட்சுமி, முத்து, யூத் ரெட்கிராஸ் ஒருங்கிணைப்பாளர் மாலதி மற்றும் புதுக்கோட்டை புற்றுநோய் ஆராய்ச்சி மற்றும் பரிசோதனை மைய்ய ஒருங்கிணைப்பாளர் வெங்கடேஷ் ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top