மூன்று சாம்சங் தொழிலாளர் பணியிடை நீக்கம் குறித்த முத்தரப்பு பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டத்தினை தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம் பகுதியில் அமைந்துள்ளது சாம்சங் இந்தியா தொழிற்சாலை. இதில் வீட்டு உபயோக சாதன பொருட்கள் தயாரிக்கும் பணியில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
இந்நிலையில் தொழிலாளர்கள் சிஐடியு தொழிற்சங்க ஆரம்பித்த நிலையில் அதற்கு அனுமதி மறுத்த தொழிற்சாலை நிறுவன செய்தியை கண்டித்து 30க்கும் மேற்பட்ட நாட்கள் தொடர் போராட்டத்தில் தொழிலாளர்கள் ஈடுபட்டனர்.
அதனை தொடர்ந்து தமிழக அமைச்சர்கள் தலைமையில் பேச்சுவார்த்தை நடைபெற்ற தொழிற்சங்க பதிவு செய்து தரப்படும் என தெரிவித்த நிலையில் கடந்த மாதம் இறுதியில் சிஐடியு தொழிற்சங்க பதிவு தொழிலாளர் நலத்துறையால் பதிவு செய்யப்பட்டது.
இதனை தொழிலாளர்கள் தொழிற்சாலை முன்பு கொண்டாடிய நிலையில் நேற்று காலை பணி நிறைவு பெற்ற பின் தொழிற்சாலையில் தொழிற்சங்க நிர்வாகிகளில் முக்கிய நபர்கள் மூன்று பேரை தொழிற்சாலை பணியிட நீக்கம் செய்வதாக அறிவித்து அதற்கான நோட்டீஸ் அளித்துள்ளனர்.
இதனைக் கண்டித்து தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் தொடர்ந்து ஈடுபட்டு வந்த நிலையில் நேற்று மாலை சென்னை தேனாம்பேட்டையில் உள்ள தொழிலாளர் நல வாரிய அலுவலகத்தில் தொழிலாளர் நல ஆணையர், சிஐடியு நிர்வாகிகள், தொழிற்சாலை நிர்வாகத்தினர் என முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றது.
இதில் இருதரப்பு விளக்கங்களும் கேட்கப்பட்டு நிலையில் எந்தவித உடன்பாடும் எட்டப்படவில்லை என்பதால் தொழிற்சாலையில் தொழிலாளர்கள் தொடர்ந்து போராட்டத்தில் தற்போது ஈடுபட்டு வருகின்றனர்.
பணியிடை நீக்கப்பட்ட தொழிலாளர்களை மீண்டும் பணிக்கு சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி நேற்று காலையில் இருந்து தொடர்ந்து தற்போது வரை போராட்டத்தில் தொழிற்சாலை வளாகத்தில் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.