Close
பிப்ரவரி 23, 2025 4:13 காலை

ஆட்சேபனையற்ற புறம்போக்கு நிலத்தில் குடியிருப்போருக்கு பட்டா : வருவாய்த்துறை அமைச்சர் தகவல்..!

வருவாய்த்துறை அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர்.ராமச்சந்திரன்

சென்னை மற்றும் சுற்றியுள்ள மாவட்டங்களில் ‘பெல்ட்’ பகுதிகளில் ஆட்சேபனையற்ற புறம்போக்கு நிலத்தில் வசிக்கும் மக்களுக்குப் பட்டா வழங்கப்படும் என்று வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

சென்னை உட்பட பல்வேறு மாநகராட்சிகளில் ’பெல்ட்’ பகுதிகளில் பட்டா வழங்கக் கூடாது என்று 1962ம் ஆண்டு சட்டம் இயற்றப்பட்டது. இதனால், அப்பகுதிகளில் வசிக்கும் மக்கள் பட்டா பெறுவதில் சிக்கல் நீடித்து வந்தது.

இந்நிலையில், சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்கள் மற்றும் பிற மாநகராட்சிகளில் பெல்ட் ஏரியாக்களில் ஆட்சேபனையற்ற புறம்போக்கு நிலத்தில் வசிக்கும் மக்களுக்கு பட்டா வழங்க முதலமைச்சர் உத்தரவிட்டிருப்பதாகத் தெரிவித்தார்.

அதனடிப்படையில், அடுத்த ஆறு மாத காலத்திற்குள் பட்டா வழங்கப்படும் என்றும் சென்னையில் மட்டும் 29,157 பேருக்கு பட்டா வழங்கப்பட இருப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார். தனிமனிதனுக்கு குடியிருக்க வீடோ, இடமோ இல்லாமல் இருக்கக் கூடாது என்ற அடிப்படையில் முதலமைச்சர் இந்த முடிவை எடுத்திருப்பதாகவும், இதன்மூலம் 1962ம் ஆண்டு முதல் நீடித்து வந்த பிரச்னை முடிவுக்கு வந்திருப்பதாகவும் பெருமிதம் தெரிவித்தார்.

மேலும், தமிழ்நாடு முழுவதும் ஆறு லட்சத்து 29 ஆயிரம் பேருக்கு அடுத்த ஆறு மாதங்களுக்குள் பட்டா வழங்கப்படும் என்றும் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் கூறினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top