தமிழக அரசின் வழிகாட்டுதலின்படி மார்ச் 8-ம் தேதி உலக மகளிர் தினத்தை முன்னிட்டு காவல்துறை சார்பாக மகளிர் உதவி -181 மற்றும் பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்யும் காவல் உதவி செயலியை பற்றி பொதுமக்களிடையே, குறிப்பாக பெண்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நிகழ்ச்சிகள் நடத்த அறிவுறுத்தப்பட்டது.
அவ்வகையில் காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சண்முகம் அறிவுரையின் பேரில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் பணிபுரியும் அனைத்து பெண் காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள் பங்குபெற்ற 3 கிலோ மீட்டர் தொடர் நடை பயணத்தினை எஸ்.பி. சண்முகம் துவக்கி வைத்தார்.
மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள அண்ணா காவல் அரங்கத்தில் துவங்கிய இந்த விழிப்புணர்வு நடைபயணம், காவலான்கேட், கரிக்கினில் அமர்ந்தாள் கோயில் தெரு , மேட்டுத்தெரு, மூஙகில் மண்டபம். ரெட்டை மண்டபம், காஞ்சிபுரம் நகர வங்கி சந்திப்பு வழியாக சென்று மாவட்ட விளையாட்டு அரங்கம் வரை சென்று நிறைவுபெற்றது.
இதில் பெண்கள் பாதுகாப்பு குறித்த காவல்துறை செயலி எண் 181 குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
இந்நிகழ்வில் காஞ்சிபுரம் டிஎஸ்பி சங்கர்கணேஷ், ஆய்வாளர்கள், காவல்துறையினர் என பலர் கலந்து கொண்டனர்.