நாமக்கல் :
நாமக்கல் அருகே சாலையோரம் நின்ற ஜீப்பின் மீது கண்டெய்னர் லாரி மோதிய விபத்தில், மஹாராஷ்டிராவைச் சேர்ந்த ஒரு பெண் உள்பட 2 பேர் உயிரிழந்தனர். படுகாயமடைந்த 6 பேர் நாமக்கல் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மஹாராஷ்டிரா மற்றும் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த 8 பேர் கடந்த ஒரு வாரத்திற்கு முன் தமிழகத்திற்கு ஜீப்பில் சுற்றுலா வந்துள்ளனர். ஜீப்பில் 4 ஆண்கள், 2 பெண்கள், 2 குழந்தைகள் வந்துள்ளனர். சுற்றுலா முடிந்து நேற்று அவர்கள் சொந்த ஊருக்கு திரும்பியுள்ளனர். நேற்று மதியம் மதுரையில் இருந்து நாமக்கல் மாவட்டம் பரமத்தி வழியாக குஜராத் நோக்கி சென்றுள்ளனர்.
கரூர் – சேலம் தேசிய நெடுஞ்சாலையில், பரமத்தி பிஎஸ்என்எல் அலுவலகம் அருகில் வந்தபோது நெடுஞ்சாலையோரம் ஜீப்பை நிறுத்திவிட்டு அனைவரும் சாப்பிட்டுள்ளனர். ஒரு சிலர் ஜீப்பிலும் மற்றவர்கள் சாலை ஓரத்திலும் அமர்ந்தும் சாப்பிட்டுள்ளனர்.
அப்போது கொச்சியில் இருந்து நாமக்கல் நோக்கி வந்த கண்டெய்னர் லாரி, திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் நின்றிருந்த ஜீப்பின் பின்புறம் அதிவேகத்தில் மோதியுள்ளது. இதில் ஜீப், அருகே இருந்த பள்ளத்தில் தூக்கி வீசப்பட்டது. மேலும், ஜீப் மீது கண்டெய்னர் லாரியும் உருண்டு விழுந்தது.
இந்த விபத்தில் மஹராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த ரிஷி (35), ரூபாளி (35) ஆகிய இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். விபத்தில் படுகாயமடைந்த பெண் ஒருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் ஜீப்பினுள் சிக்கிக் கொண்டார். தகவல் அறிந்து அங்கு விரைந்த போலீஸார் மற்றும் தீயணைப்புத்துறையினர் நீண்ட நேர போராட்டத்திற்குப் பின் அந்து பெண்ணை உயிருடன் மீட்டு வெளியே கொண்டு வந்தனர்.
அந்த பெண் உள்பட படுகாயமடைந்த 6 பேர் நாமக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்தால் நாமக்கல்-கரூர் தேசிய நெடுஞ்சாலையில் வாகனப் போக்குவரத்து சிறிது நேரம் பாதிக்கப்பட்டது. இச்சம்பவம் தொடர்பாக பரமத்தி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.