Close
மார்ச் 7, 2026 4:25 மணி

அனைத்து லாரிகளுக்கு ஏசி பொருத்துவது கட்டாயம் : விதியை ரத்து செய்ய மத்திய அரசுக்கு கோரிக்கை..!

லாரி டிரைவர் கேபினில் பொருத்தப்பட்டுள்ள ஏர்கண்டிஷனர்.

நாமக்கல் :

இந்தியாவில் அனைத்து லாரிகளுக்கும், கட்டாயம் ஏசி வசதி செய்ய வேண்டும் என்ற மத்திய அரசின் உத்தரவால் லாரி உரிமையாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த விதிமுறையை ரத்து செய்ய வேண்டும் என அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இந்தியாவில், அத்தியாவசியப் பொருட்கள், தொழில்சாலைகளுக்கு வேண்டிய மெஷினரிகள், விவசாய விளைபொருட்கள் உள்ளிட்ட அனைத்து சரக்குப் போக்குவரத்துக்கும் சாலை போக்குவரத்து முக்கிய பங்கு வகிக்கிறது. உள்நாட்டு போக்குவரத்தில் சுமார் 70 சதவீதம் சரக்குகள் லாரிகள் மூலம் கொண்டுசெல்லப்படுகின்றன.

இந்தியாவில் சுமார் சுமார் 1 கோடியே 20 லட்சம் லாரிகள் ஓடிக்கொண்டுள்ளது. வருகிற 2028க்குள் மொத்த லாரிகள் எண்ணிக்கை 1.50 கோடியாக இருக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் மட்டும் சுமார் 12 லட்சம் லாரிகள் மற்றும் சரக்கு வாகனங்கள் ஓடிக்கொண்டுள்ளன.

இந்தியாவில் ஆண்டுதோறும் 4.6 பில்லியன் டன்களுக்கும் அதிகமான சரக்குகள் லாரிகள் மூலம் கொண்டு செல்லப்படுகிறது. மொத்த போக்குவரத்து செலவு மதிப்பீடு ரூ.9.5 லட்சம் கோடியாகும். நகரமயமாக்கல், மக்கள் தொகை அதிகரிப்பு, ஆன்லைன் வணிகத்தின் உயர்வு மற்றும் வருமான அளவுகள் அதிகரிப்பதால் பொருட்களுக்கான தேவை அதிகரித்து வருகிறது. இந்தத் தேவை தொடர்ந்து வளர்ந்து வருவதால், அதனுடன் தொடர்புடைய சாலை சரக்கு இயக்கம் 2050 ஆம் ஆண்டுக்குள் 9.6 டிரில்லியன் டன்-கிலோமீட்டராக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியா உலகின் 3வது பெரிய நாடாக உருவெடுக்கும் என்ற நிலை உள்ளதால், வருங்காலங்களில் தொழில்துறை வேகமாக வளரும். அப்போது சரக்குப்போக்குவரத்திற்காக லாரித்தொழிலும் வளரும் என நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இந்தியா முழுவதும் லாரிகளை ஓட்டுவதற்காக, பிரத்யேகமாக டிப்ளமோ அல்லது பட்டம் பெற்று, பயிற்சி பெற்ற டிரைவர்களின் எண்ணிக்கை குறைவு. குறிப்பாக தமிழகத்தில் பட்டப்படிப்பு முடித்து லாரிகளில் டிரைவர்களாக செல்பவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு, மத்திய மாநில அரசுகள் பள்ளிகளில் இடைநிற்றல் இல்லாமல் அனைவரும் உயர்கல்வி படிக்க வேண்டும் என பல திட்டங்களை செயல்படுத்தி வருவதால், அதிகமாக படித்தவர்கள் லாரிகளில் டிரைவர்களாக பணியாற்ற வருவதில்லை.

இதனால் ஆண்டுக்கு ஆண்டு லாரிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் அதே வேளையில், லாரிகளுக்கான டிரைவர்கள் தட்டுப்பாடு மிகவும் அதிகரித்துள்ளது. நாடு முழுவதும் சுமார் 25 சதவீத லாரிகள் டிரைவர்கள் பற்றாக்குறையால் இயக்க முடியால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதனால் லாரி உரிமையாளர்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.

2000ம் ஆண்டு வரை ஒரு லாரிக்கு 2 டிரைவர்கள் மற்றும் ஒரு கிளீனர் என 3 பேர் பணியாற்றினார்கள். தற்போது ஒரு லாரிக்கு ஒரு டிரைவர் கிடைப்பதே மிகவும் அரிதான நிலையில், பணியில் செல்லும் டிரைவர்களுக்கு பணி சுமை கூடுகிறது. மத்திய, மாநில அரசுகள் சாலைப்போக்குவரத்து தொழிலை மேம்படுத்தும் வகையில், நாடு முழுவதும் டிரைவர்கள் பயிற்சி மையங்களை துவங்கி கனரக வாகன டிரைவர் பயிற்சி அளிப்பதன் மூலம் லாரித்தொழிலுக்கு தேவையான டிரைவர்கள் கிடைப்பதுடன், இளைஞர்களுக்கு நல்ல வருமானத்துடன் கூடிய வேலை வாய்ப்பை வழங்க முடியும்.

ஆரம்பகாலங்களில் கார்களில் ஏர்கண்டிஷன் வசதி என்பது சொகுசு என கருதப்பட்டது. தற்போது ஏர்கண்டிஷன் வசதி இல்லாத கார்களே இல்லை. இந்தியாவில் 99 சதவீத லாரிகளில் இதுவரை ஏர்கண்டிஷன் வசதி இல்லை. இந்த நிலையில் வெயில் காலங்களில் டிரைவர்கள் களைப்பின்றி, புத்துனர்ச்சியுடன் லாரிகளை இயக்குவதற்கு அனைத்து லாரி கேபின்களிலும், ஏர்கண்டிஷன் பொருத்துவதை மத்திய அரசு கட்டாயமாக்கியுள்ளது.

இந்தியாவில், குறிப்பாக நடுத்தர மற்றும் கனரக வாகனங்கள் இனி ஏசி கேபினுடன் மட்டும்தான் வெளிவரும். புதிய வாகனங்களுக்கு கட்டாய ஏசி கேபின்கள் ஒரு தேவையாக மாறி வருகின்றன. தற்போது டாடா மோட்டார்ஸ், அசோக் லேலண்ட், மஹிந்திரா, ஐஷர், பாரத் பென்ஸ் உள்ளிட்ட முக்கிய லாரி உற்பத்தியாளர்கள் தங்கள் லாரிகள் மற்றும் எல்சிவி வாகனங்களை ஏசி பொருத்திய கேபின்களுடன்தான் விற்பனை செய்ய முடிவு செய்துள்ளனர். குறிப்பாக ஏசி பொருத்தப்பட்ட வண்டிகளை ஓட்டாமல் நிறுத்தி இன்ஜினை மட்டும் ஆன் செய்தால் சுமார் 3 நிமிடம் மட்டுமே ஏசி இயங்கும் வகையில் நவீன சென்சார்கள் இந்த லாரிகளில் பொருத்தப்பட்டுள்ளன.

ஏசி பொருத்தப்பட்ட லாரிகளின் விலை ஏற்கனவே உள்ள விலையைவிட ரூ. 50 ஆயிரம் முதல் 80 ஆயிரம் வரை அதிகமாக உள்ளது. லாரி உரிமையாளர்களுக்கு இது ஒரு கூடுதல் செலவு. ஏற்கனவே 1 லாரி முதல் 500 லாரி வரை வைத்திருக்கும் லாரி உரிமையாளர்கள், புதிய ஏசி பொருத்தப்பட்ட லாரிகளை வாங்கினால், டிரைவர்கள் ஏசி லாரிகளில் பணிபுரியவே விரும்புவார்கள், அதனால் ஏற்கனவே உள்ள பழைய லாரிகளுக்கு டிரைவர்கள் கிடைப்பது மிகவும் அரிதாகிவிடும்.

அதனால் பழைய லாரிகளை ஓட்ட முடியாமல் மிகவும் சிரமப்படும் சூழல் உருவாகும். மேலும் ஏசி பொருத்தப்பட்ட லாரிகளை இயக்குவதற்கு செலவு அதிகரிக்கும் குறிப்பாக டீசல் செலவு கூடுதலாகும். இதனால் லாரி உரிமையாளர்களுக்கு பெரிதும் பாதிப்பு ஏற்படும்.

எனவே விருப்பம் உள்ளவர்கள் ஏசி பொருத்திய லாரிகளை வாங்கிக்கொள்ளலாம். அனைத்து புதிய லாரிகளுக்கும் கட்டாயம் ஏசி பொருத்த வேண்டும் என்ற விதிமுறையை மத்திய அரசு உடனடியாக விலக்கிக்கொள்ள வேண்டும் என லாரி உரிமையாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top