நாமக்கல்:
சொந்த வாகனங்களை வாடகைக்கு இயக்க தடை விதிக்கக் கோரி, டூரிஸ்ட் டாக்சி உரிமையாளர்கள் கலெக்டரிடம் கோரிக்கை விடுத்தனர்.
இது குறித்து டூரிஸ்ட் டாக்சி உரிமையாளர்கள், நாமக்கல் கலெக்டரிடம் அளித்துள்ள கோரிக்கை மனுவில் கூறியுள்ளதாவது:-
நாமக்கல் மாவட்டத்தில், நாமக்கல், ராசிபுரம், சேந்தமங்கலம், பரமத்தி வேலூர் மற்றும் திருச்செங்கோட்டில் சொந்தமாக கார் மற்றும் வேன் உள்ளிட்ட வாகனங்கள் வைத்திருப்போர் அவற்றை வாடகைக்கு இயக்குகின்றனர். கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு இது அதிகரித்துள்ளது. இதனால் முறையாக வரி செலுத்தி வாடகைக்கு டூரிஸ்ட் வாகனங்களை இயக்கும் தொழிலில் ஈடுபடுவோர் பெரும் பாதிப்பிற்குள்ளாகி வருகின்றனர்.

இதனை ஆர்டிஓ துறையினர் கண்காணித்து உரிய நடவடிக்கை எடுக்க உத்திரவிட வேண்டும். சொந்த வாகனங்களில் விதிமுறை மீறி பம்பர் மற்றும் முகப்பு விளக்குகளாக அதிக வெளிச்சம் தரும் எல்இடி விளக்குகளை பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
* பொதுவழிப்பாதை கேட்டு கோரிக்கை மனு:
நாமக்கல் அருகே உள்ள எலுவம்பட்டி கிராம மக்கள் கலெக்டரிடம் அளித்துள்ள கோரிக்கை மனுவில் கூறியுள்ளதாவது:: எலுவம்பட்டி கிராமத்தில் உள்ள காலனியில் 52 குடியிருப்புகள் உள்ளன. இதற்கு முறையான பொதுவழிப்பாதை இல்லை.
இதனால் தனியார் இடத்தின் வழியாக சென்று வரும் நிலை உள்ளது. வாகனங்கள் செல்ல இயலாது. நடந்து தான் செல்ல வேண்டும். உடல் நலக்குறைபாடு ஏற்பட்டால் கூட, பாதிக்கப்பட்டவர்களை தூக்கிக் கொண்டு அரை கி.மீ., தூரம் நடந்து சென்றால் வந்தால் மட்டுமே வாகனங்களில் செல்ல முடியும். இதுதொடர்பாக கடந்த ஜூன் மாதம் மனு அளிக்கப்பட்டது.
தொடர்ந்து தாசில்தார் தலைமையிலான வருவாய் துறையினர் ஆய்வு மேற்கொண்டனர். அதன்பின் பாதை வசதி ஏற்படுத்தி தருவது தொடர்பாக எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. இதனால் கிராம மக்கள் பெரும் சிரமத்திற்குள்ளாகி வருகிறோம். எனவே பொதுவழிப்பாதை ஏற்படுத்தி தர விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனுவில் கூறியுள்ளனர்.




